மகளை மீட்டுத் தாருங்கள், கதறி அழுத தாய்....



பார் விதியில் உள்ள கிறிஸ்தவ சபையொன்றில் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடமாக உள்ளே வைத்துள்ளதாகவும் தனது மகளை தன்னிடம் மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர்  குறித்த சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபையில் இச்சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றது. இந்த பதற்ற நிலைமையை  மட்டக்களப்பு பொலிஸார் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், அந்தத் தாயை குறித்த சபையின் பணியாளர்கள் உள்ளே விட அனுமதிக்காத நிலையில் வெளியில் இருந்து தனது மகளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு குறித்த தாய் போராட்டம் நடாத்தியுள்ளார்.

தனது மகள் தன்னை ஐந்து வருடமாக பார்க்கவில்லையெனவும், மகள் தொடர்பில் முகநூல்களில் பிழையான விடயங்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் தனது மகளை மீட்கும் வரையில் இங்கிருந்து போகமாட்டேன் என அந்தத் தாய் போராட்டம் நடாத்தியுள்ளார்.

இதன்போது அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த தாய்க்கு ஆதரவாக பேசியதுடன் குறித்த சபைக்குள் சென்று சபை நிர்வாகத்துடன் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர்.

எனினும் குறித்த பெண்ணை அனுப்ப முடியாது என நிர்வாகம் தெரிவிக்க இளைஞர்கள் சபைக்குள் புகுந்து குறித்த பெண்ணை மீட்க முனைந்தபோது அங்குவந்த பொலிஸார் குறித்த இளைஞர்களை வெளியேற்றி நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

இதன்போது குறித்த தாயின் கோரிக்கை தொடர்பிலும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறித்த தாயையும் மகளையும் குறித்த சபையின் போதகரையும் பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

இதேநேரம் குறித்த கிறிஸ்தவ சபை பகுதியில்  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மகளை மீட்டுத் தாருங்கள், கதறி அழுத தாய்.... மகளை மீட்டுத் தாருங்கள், கதறி அழுத தாய்.... Reviewed by Editor on June 01, 2019 Rating: 5