அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மேலும் இரண்டு நாட்கள்


தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறிய அரச ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றும் (21), நேற்று முன்தினமும் (20) தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்க முடியாமல் போன வாக்காளர்கள் வெள்ளிக்கிழமை (24) காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணிவரையிலும், சனிக்கிழமை (25) காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரையிலும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் தமது மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்குகளைச் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புள்ளடியிடப்படாத வாக்குச் சீட்டுப் பொதிகள் தமது பொறுப்பில் உள்ள தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் கூடிய விரைவில் அவற்றை உரிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் ஒப்படைப்பது அவசியமாகும் என்று நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக மூடுவதற்கு விசேட வேலைத்திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதுடன், கட்சிப் பிரதிநிதிகள் இரவு நேரத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களில் தங்கியிருக்க அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மேலும் தெரிவித்தார்.
(News.lk)
அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மேலும் இரண்டு நாட்கள் அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மேலும் இரண்டு நாட்கள் Reviewed by Editor on July 22, 2020 Rating: 5