(றிஸ்வான் சாலிஹூ)
உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உளநல பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்றது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் டாக்டர். ஐ.எம்.ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உளநலப்பிரிவு பதில் பொறுப்பு வைத்தியர் டாக்டர். எம்.ஜே.நௌபல், டாக்டர். திருமதி சுமதி றெமன்ஸ் மற்றும் டாக்டர். நபில் இல்யாஸ் (RHO) ஆகியோர் இத்தினத்தை பற்றி உரையாற்றினார்கள்.
தற்கொலை என்பது உள்நோக்கோடு ஒருவர் தம்மை தாமே மாய்த்துகொள்வது என்பதாகும் என்றும். கடந்த 45 வருடகால இடைவெளியில் தற்கொலை மூலமான இறப்பு வீதம் 60 ஆக அதிகரித்துள்ளது என்பதோடு, உலகளாவிய ரீதியில் மரணத்திற்கு காரணமாக போர் கொலை, புற்றுநோய் போன்றவற்றை விட 10ஆவது முக்கிய காரணியாக தற்கொலை விளங்குவதாக வளவாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை மூலம் தமது உயிரை மாய்த்து கொள்கின்றனர்.இதேநேரம் நமது நாட்டை பொறுத்தவரை தற்கொலையினால் ஒவ்வொரு 40 நொடிக்கு ஒருவர் இறப்பதுடன் வருடத்திற்கு 4000 பேர்வரையிலானோர் உயிர் இழக்கின்றனர். மேலும் 15 தொடக்கம் 29 வரைக்குட்பட்ட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுவதோடு, இதற்கு உயிரியல் உளவியல் மற்றும் சமூக ரீதியான காரணிகளே செல்வாக்கு செலுத்துகின்றது.
இதன் அடிப்படையில் மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் முதலிடத்திலும் மதுபழக்க அடிமை, போதைவஸ்து பாவனை, பெற்றோர் கண்காணிப்பு போதாமை உள்ளிட்ட காரணிகளும் முறையே அமைந்துள்ளமையே இதற்குரிய பிரதான காரணிகளாக காணப்படுகிறது என்று நிகழ்வில் கலந்து கொண்டு விளக்கமளித்த வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Reviewed by Editor
on
September 11, 2020
Rating:


