அக்கரைப்பற்று பொதுச் சந்தை தவிர ஏனைய பகுதிகள் திறப்பு - முதல்வர் ஸகி


(றிஸ்வான்சாலிஹூ)

இலங்கையில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலை அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து முடக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்றின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மீள திறப்பது தொடர்பில் இன்று (22) செவ்வாய்க்கிழமை காலை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூஸா நக்பர் தலைமையில் கூடிய ,"கொறோனா செயற்பாட்டு வழிகாட்டல் குழு" கடந்த சில நாட்களாக தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையை கருத்தில் கொண்டு, முடக்கப்பட்டுள்ள பொதுச் சந்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை நாளை (23) புதன்கிழமை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

அக்கரைப்பற்றின் ஏனைய அனைத்து கடைகளும் , சேவை நிலையங்களும் மாலை 6 மணி வரையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி திறக்கலாம் என்றும், அவ்வாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத கடைகள் மூடப்படுவதுடன் , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் ஒன்று சேரும் நிகழ்வுகள் மற்றும்  பள்ளிவாசல்களில் தொழுகை என்பன தொடர்ந்தும் தற்காலிகமாக தவிர்க்கப்படுவதுடன், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், சலூன்கள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரும் வரை மூடியே காணப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல்கள் தொடர்ந்தும் உணவுகளை கொண்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவதுடன், வங்கிகள் பகல் 12 மணிவரை மட்டுபடுத்தபட்ட அளவில் இயங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே சுகாதார துறை அதிகாரிகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் கவனத்தில் கொண்டு இவைகளை நடைமுறைப்படுத்த ஒத்தாசை வழங்க வேண்டும் என்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி பொதுமக்களை வினயமாக கேட்டுக் கொள்கின்றார்.

இன்றைய கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,இராணுவ பொறுப்பதிகாரி, உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று பொதுச் சந்தை தவிர ஏனைய பகுதிகள் திறப்பு - முதல்வர் ஸகி அக்கரைப்பற்று பொதுச் சந்தை தவிர ஏனைய பகுதிகள் திறப்பு - முதல்வர் ஸகி Reviewed by Editor on December 22, 2020 Rating: 5