
(சர்ஜுன் லாபீர்)
இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து சமூர்த்தி வங்கிகளையும் கணனி மயப்படுத்தி பொதுமக்களுக்கு துரித சேவையை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியின் சகல கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளும் கணனி மயப்படுத்தப்பட்டு தற்போது பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் சுமார் 20000 பொதுமக்களுடைய வங்கி கணக்குகள் நடைமுறையில் உள்ளதோடு சமூர்த்தி உதவி பெறும் 3400 குடும்பங்களின் வங்கி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த வங்கி கணக்குகள் அனைத்தும் தற்போது கணனி மயப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பதவி உயர்வு பெற்று செல்லும் கல்முனை பிரதேச செயலாளருக்கு சமூர்த்தி மகா சங்கத்தினரினால் கெளரவிப்பும்,பாராட்டு நிகழ்வும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம். எம்.முஹம்மட் நஸீர் கலந்து கொண்டு கணனி மயப்படுத்தல் செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி முகாமையாளர் மோசஸ் புவிராஜ், உட்பட சமுர்த்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
January 20, 2021
Rating:
