
ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களுடனான சந்திப்பொன்று இன்று (18) திங்கட்கிழமை காலை எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் NFGG சார்பாக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும், கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ஓய்வு பெற்ற அதிபர் மன்சூர் அவர்களும் கலந்து கொண்டனர் என்று பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த பொதுத் தேர்தலை தொடர்ந்து SJB தலைவர் அவர்களுடன் பல்வேறு சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் விசேட பிரச்சினைகள் மற்றும் தேசத்தின் எதிர்கால நலன் போன்ற பல்வேறு விடயங்கள் இச்சந்திப்புகளின்போது பேசப்பட்டன.
அத்துடன், SJB உடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளிலும் தொடராக ஈடுபடுமாறு சஜித் பிரேமதாச அவர்கள் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வந்திருந்தார்.இந்தப் பின்னணியிலேயே இன்றைய சந்திப்பும் இடம்பெற்றது.
தேசத்தினதும் நாட்டின் சகல மக்களினதும் நலனுக்காக உழைக்கின்ற பொது அரசியல் முயற்சிகளில் அக்கறை கொண்டுள்ள கட்சி என்ற வகையில் இந்த அழைப்பினை சாதகமாக பரிசீலிக்க முடியும் என NFGG பிரதிநிதிகள் சஜித் பிரமேதாஸவிடம் தெரிவித்தனர்.
அத்தோடு தமது கட்சியின் தலைமைத்துவ சபையோடு இன்னும் விரிவாக கலந்துரையாடி எவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியினுடன் இணைந்த அரசியல் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்வதில் பங்களிப்பு செய்ய முடியும் என்பதனை தெரிவிப்பதாகவும் கூறினர்.
இச்சந்திப்பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
January 18, 2021
Rating: