(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஆணமடுவ பிராந்திய நிலையம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (11) வியாழக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நினைவு பலகையை திறந்து வைத்து இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஆணமடுவ பிராந்திய நிலையத்தை திறந்து வைத்த கௌரவ பிரதமர், அங்கு வருகை தந்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை யதார்த்தமாக்கும் வகையில் திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்த நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜெயரத்ன, சீதா அரம்பேபொல, சனத் நிஷாந்த, லொஹான் ரத்வத்தே, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே, நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக பிரியந்த, சிந்தக மாயாதுன்னே, அலி சப்ரி ரஹீம் மற்றும் திறன் மேம்பாட்டு, தொழில் கல்வி மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சீ.டபிள்யூ. ரத்நாயக்க மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் என்று அந்த ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
