
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கெளரவ அதாஉல்லாஹ் அகமட் சகி அவர்களுக்கும் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் விளையாடும் உதைபந்தாட்ட மற்றும் கிரிக்கெட் அணி கழகங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று (07) ஞாயிற்றுக்கிழமை மாநகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில், உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் ஒரே நேரத்தில் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு இம் மைதானத்தில் போதியளவு இடவசதி குறைவாக இருப்பதாலும், இரண்டு விளையாட்டு துறையினரும் ஒரு நேரத்தில் விளையாட முற்படும் போது வீரர்களுக்கிடையில் சில சமயங்களில் பிரச்சினைகள் உண்டாவதையும் அவதானிக்க முடிவதால், இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளும் அடிப்படையிலயே மாநகர முதல்வரோடு இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று மூத்த உதைபந்தாட்ட வீரர் ஒருவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாகவும், விளையாட்டு வீரர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டு,அத்தோடு பல விடயங்களுக்கான உடனடி தீர்வுகளை மாநகர முதல்வர் இவர்களுக்கு வழங்கினார்.
உடனடி தீர்வுகளில் ஒன்றான மைதான தற்காலிக அபிவிருத்தி பணிகளை மாநகர சபை முதல்வரின் மேற்பார்வையின் கீழ் மேற் கொள்ள அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரி வட்டார கெளரவ உறுப்பினர்களான ஜனாப்.சிறாஜ் மற்றும் புதுப்பள்ளி வட்டார உறுப்பினர் ஏ.ஜி.அஸ்மி ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.
இன்றைய சந்திப்பில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த யங் பிளவர் விளையாட்டு கழகம், அல் குறைஷ் விளையாட்டுகழகம், ஹிஜ்றா விளையாட்டு கழகம், நோ நேம் விளையாட்டு கழகம், டஸ் மாஸ் விளையாட்டு கழகம், 11 ஸ்காட் விளையாட்டு கழகம், ஷூ சிற்றி விளையாட்டு கழகம், எப்.எஸ்,ஸி விளையாட்டு கழகம், ஏ.கே.பி விளையாட்டு கழகம் ஆகிய கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
March 07, 2021
Rating:


