கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் மக்கள் தத்தளித்து கொண்டு இருக்கும் நேரத்தில், தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகிற நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை (Mucormycosis) நோயின் தாக்கம் பரவிவருகிறது. இது மக்களிடையே ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கருப்பு பூஞ்சை நோயினால் இந்தியாவில் இதுவரை 5500 பேர் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை பிளாக் பங்கஸ் காரணமாக 126 பேர் நாடு முழுக்க பலியாகியுள்ளனர்.
எவ்வாறு ஏற்படுகிறது.
இந்த நோய் மண், அழுகிப்போன மரம், இலைகள் ஆகியவற்றில் இது இருக்கும். காற்றில் பறந்து வந்து, வெட்டுக்காயங்கள் வழியாகவும், மூக்கு துவாரங்கள் மூலமாகவும் உடலை தாக்கும். இது பெயருக்கு தான் கருப்பு பூஞ்சை. உண்மையில் இதன் நிறம் வெள்ளையாகத் தான் இருக்கும். உடல் பகுதியில் ஒரு இடத்தை தாக்கி, அதனை அழுகும் நிலைக்கு கொண்டு சென்று, அந்த பகுதியில் கருப்பாக மாறிவிடும். அதனால்தான் இதற்கு கருப்பு பூஞ்சை என்று பெயர்.
நோய் ஏற்படக் காரணம்-
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், பலர் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து இருப்பார்கள். இந்த கருப்பு பூஞ்சை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களைத்தான் தாக்குகிறது. அந்த வகையில் பார்க்கும்போது, தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சையில் இருந்தவர்கள் 2 முதல் 3 மாதங்கள் வரை பாதுகாப்பாக இருப்பது நல்லது. இந்த நோய் வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை. அனைத்து தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
நோய் அறிகுறி-
தொண்டையில் கெட்டிச்சளி, மூக்கடைப்பு, தலைவலி என ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கும். அதன்பிறகும் கவனிக்காமல் விட்டால், கண் பகுதியை பாதித்து, முதலில் இமை பகுதியை தாக்கி, கண் சிவந்து அல்லது வீக்கத்துடன் இருப்பது, இரட்டை பார்வையாக தெரிவது போன்ற அறிகுறிகள் இருக்கும். அதன் பின்னர் பார்வை நரம்புகளை அழுகச் செய்யும். இதனால் பார்வையிழப்பு ஏற்படும். அதனைத் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் மூளைப்பகுதிகளை தாக்கி, மூளைக்காய்ச்சல் நோயினால் மரணத்தை கூட சந்திக்க நேரிடும்.
யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படும்?
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், (Steroid) மருந்து தொடர்ச்சியாக எடுப்பவர்கள், வயதானவர்கள், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகளவில் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கக்கூடும். எனவே அவர்கள் தங்களை கவனமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்து கொள்ள வேண்டும்.
கட்டுப்படுத்துவது எவ்வாறு
வீட்டைச்சுற்றி இருக்கும் சுற்றுப்புற வளாகப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 3 மாதம் வரை வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தாலே போதும். கொரோனாவில் இருந்து பாதுகாக்க நாம் எப்படி முககவசத்தை அணிகிறோமோ?. அதேபோல், இதற்கும் முககவசத்தை அணிவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவு வகைகளை அதிகளவில் எடுத்து கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.
நோய் பரவுமா?
இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. மண், அழுகிப்போன மரங்கள், இலைகள் ஆகியவற்றில் இருந்து காற்றின் மூலம் தான் பரவுகிறது.
சிகிச்சை-
ஊசி, மருந்து மூலமாகத் தான் சரிசெய்ய முடியும். அதிலும் கருப்பு பூஞ்சை ஒரு இடத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டால், அந்த பகுதியை அறுவை சிகிச்சை மூலமாகவே அகற்ற முடியும்.
இதற்கு மருந்தாக liposomal amphotericin B மருந்துக்கு வழங்கப்படுகிறது.
காது, மூக்கு, தொண்டை (இ.என்.டி.) நிபுணர்கள், கண் வைத்தியர்கள், நரம்பியல் வைத்தியர்கள் மற்றும் பொது வைத்தியர்களை அணுகி சிகிச்சை பெறலாம்.
Reviewed by Sifnas Hamy
on
May 22, 2021
Rating:
