ஒரு மாகாண பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டால் பாடசாலை நிலையியல் கட்டளை SO-50 க்கு அமைய தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட தினத்தில் இருந்து மூன்று வருடங்களுக்குள் தேசிய பாடசாலைக்கு எவரும் உள்ளீர்க்கப்படமாட்டார்கள் என்று இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் ஏ.எல்.முகம்மத் முக்தார் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அப் பாடசாலையின் பணிக்குழுவான அதிபர், ஆசிரியர், கல்விசாரா பணியாளர் ஆகியோர் இவ்வாறு தேசிய பாடசாலை கட்டமைப்புக்குள் உள்ளீர்க்கப்படமாட்டார்கள் என கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் மாகாண பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
இம் மூன்று வருடத்திற்குள் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலையில் இருந்து மாகாண பாடசாலைக்கு ஒரு ஆசிரியர் அல்லது அதிபர் அல்லது கல்விசாரா ஊழியர் இடமாற்றம் பெறலாம் அல்லது இடமாற்றம்செய்யப்படலாமென கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலையில் இருந்து மாகாண பாடசாலைக்கு இடமாற்றம் பெறலாமென இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் ஏ.எல்.முகம்மத் முக்தார் மேலும் தெரிவித்தார்.