இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் விடயத்தில் அரசியல் இடையூறுகள் வேண்டாம்

கடந்த நல்லாட்சி காலத்தில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள்,சமூக மேம்பாடு இந்து சமய விவகார அமைச்சினால் தேசிய மொழிகள் கற்கை நிலையத்தின் ஊடாக 1300 இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டு பின்னர் அந்நியமனங்கள் இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த மொழி பயிற்றுவிப்பாளர்கள் கடும் சங்கடத்துக்கு உள்ளாக்கப்பட்டு நடு வீதியில் தள்ளப்பட்டார்கள் என்று தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் கலாநிதி.வி.ஜனகன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந் நிலைக்கு தனிப்பட்ட ஒருவரின் அரசியலே காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பாதிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் மத்தியில் காணப்பட்டது. 

அத்துடன் இந்த பயிற்று விப்பாளர்களுக்கு இரண்டாம் மொழி பயிற்றுவிக்கும் செயற்பாடுகளில் என்னுடைய பங்களிப்பும் கடந்த காலங்களில் காணப்பட்டது. 

இதன் பிரகாரம் நானும் இந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல தடவைகள் தேசிய மொழிகள் கற்கை நிலையத்தின்யுடைய பணிப்பாளர் நாயகம் திரு.பிரசாந்த் ஹேரத் அவர்களிடம் இவ்விடத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் என்ற அடிப்படையில் இந்த மாணவர்களுக்கு ஏதாவதொரு ரீதியில் விடிவை பெற்றுக் கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தேன். 

மேலும் அவர்களை உங்கள் நிறுவனத்தின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராகவேனும் இனணத்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டேன்.

அதன் பின்னர் ஜனநாயக ரீதியாகவும், நேரடியாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ரீதியில் அந்த மாணவர்கள் கடுமையாக போராட்டங்களை மேற்கொண்டார்கள்.

தற்போது தேசிய மொழிகள் கற்கை  நிறுவனத்தின் ஊடாக இந்த மாணவர்களுக்கு குறுகிய கால ஒரு பயிற்சியை வழங்கி சான்றிதழ்களை வழங்குவதாக தேசிய மொழிகள் கற்க நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் பயிற்சி ஆரம்பிக்கபட்டிருப்பதாகவும் அறிந்தேன்.

முதற்கண் எனது வேண்டுகோளையும், இம் மாணவர்களின் ஜனநாயக  வேண்டுகோளையும் அரசியல் கடந்து செவிசாய்த்த அந்த நிறுவனத்தின் தவிசாளருக்கும் விசேடமாக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மேலும், இம்மாணவர்களை தேசிய மொழிகள் கற்கை நிலையத்தின் வெளிவாரி பயிற்றுவிப்பாளர்களாக உங்கள் நிறுவனத்தின் ஊடாக அங்கீகாரத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு விடிவை பெற்று கொடுங்கள் என்பதையும் பணிப்பாளர் நாயகத்திடம் வினையமாக கேட்டுக் கொண்டேன்.

நான் கேட்டுக்கொண்டதன் பயனாகவும் மாணவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் இன்று அதற்கும் உடன்பட்டு மாணவர்களை தேசிய மொழி கற்கை நிலையத்தின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராக இணைத்துக் கொள்வதாக இன்று (07/09/21) பணிப்பாளர் நாயகம் ஒப்புக் கொண்டதாக அறிந்து கொண்டேன்.

அதற்காக வேண்டி தேசிய மொழிகள் கற்கை நிறுவனத்தின் தவிசாளருக்கும் பணிப்பாளர் நாயகத்திற்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால் இரண்டு வருடங்கள் குறித்த மாணவர்களை கணக்கெடுக்காத அரசியல்வாதிகள இன்று அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தீர்விலும் அரசியல் உள்நோக்கம் கொண்டு மூக்கை நுழைப்பது மிக நகைப்புக்குரிய விடயமாக இருக்கிறது. 

ஆகவே, இம்மாணவர்களின் இந்த விவகாரம் அவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த விடயம். இதில் அரசியலை நுழைத்து அவர்களின் வாழ்க்கையில் தடைகளை ஏற்படுத்தி விடாதீர்கள் என ஆணித்தரத்துடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அத்துடன் இவ் மாணவர்களுக்கு இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் என்ற உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அதை வழங்குவதாக கூறி இருக்கும் தேசிய மொழிகள் கற்கை நிலையம் இவ்விடயத்தில் நிரந்தர தீர்வு கொடுக்க வேண்டும் இதில் தனிப்பட்ட எந்த அரசியல் தலையீடுகளும் இருக்கக் கூடாது என்பதில் அரசியல் கடந்து தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் இந்த மாணவர்களுக்காக எனது குரல் எப்போதும் ஒலிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் விடயத்தில் அரசியல் இடையூறுகள் வேண்டாம் இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் விடயத்தில் அரசியல் இடையூறுகள் வேண்டாம் Reviewed by Editor on September 07, 2021 Rating: 5