(நூருள் ஹுதா உமர்)
கல்முனை வடக்கு செயலகம் என்பது தமிழர்களின் அரசியல் உரிமை என முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்மாந்துறையை சேர்ந்த எம்.ஐ.எம். மன்சூர் சொல்லியிருப்பதன் மூலம் அவருக்கு கல்முனை செயலக பிரச்சினை பற்றி எந்தவித அறிவும் இல்லை என்றே தெரிகிறது என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முஸ்லிம் காங்கிரசினதும் ரவூப் ஹக்கீமினதும் தீவிர விசுவாசியாக இருந்த மன்சூர் அண்மைக்காலமாக ரவூப் ஹக்கீமை கடுமையாக விமர்சித்து வந்ததையும் முஸ்லிம் காங்கிரஸ் என்பது சகோதரர்களின் கம்பனியாகி விட்டது என்று அவர் சொன்னதை கேட்டு நாம் மகிழ்ச்சியடைந்தோம். இப்போதாவது மிக தாமதமாக ரவூப் ஹக்கீம் என்றால் யார் என்ற தெளிவு அவருக்கு வந்தது என நினைத்தோம்.
இந்த நிலையில் இவர் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு பதிலளிக்கையில் கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழர்களின் அரசியல் அதிகாரம் என சொன்னதன் மூலம் கல்முனை செயலக பிரச்சினை என்றால் என்ன, அரசியல் அதிகாரம் என்றால் என்ன என்ற அறிவுச்சூனியமாக இவர் உள்ளார்.
கல்முனை செயலக பிரச்சினை என்பது தமிழர்களின் அரசியல் பிரச்சினை அல்ல, அது தேவையற்ற நிர்வாக பிரச்சினையாகும். கல்முனை என்பது 100 வீதம் தமிழ் மொழி செயலகமாகும். இதனை பிரிப்பது தமிழ் முஸ்லிம்களை பிரிப்பது போன்றதாகும்.
சம்மாந்துறையிலும் தமிழ் மக்கள் வாழ்வதால் சம்மாந்துறையை இரண்டாக பிரித்து அங்கு முஸ்லிம் பிரதேச செயலகம் என்றும், சம்மாந்துறை பஸாரை இணைத்து தமிழ் செயலகம் என்றும் பிரிவை உண்டாக்க மன்சூர் அனுமதிப்பாரா? எம்.ஐ.எம். மன்சூருக்கு கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் எச். எம்.எம். ஹரீஸ் மீது கோபம் இருக்கலாம். அதற்காக கல்முனையை துண்டாடும் முயற்சிக்கு எம்.ஐ.எம்.மன்சூர் துணை போவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
கல்முனையை வைத்து எச்.எம்.எம்.ஹரீஸ் அரசியல் செய்கிறார் என்பது உண்மை. இதனை ஒழிப்பதற்காக கிழக்கு மாகாண சபை அமைச்சராகவும், ஹரீஸ் உள்ள அதே கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மன்சூர் ஏதாவது சிறு முயற்சியை செய்தாரா? இவரது கட்சி தலைவர் அமைச்சரவை அமைச்சராக இருந்த போது கல்முனையை 1987ம் ஆண்டு போல் நான்காக ஒரே இரவில் பிரித்திருக்க முடியும். அதனை செய்யாது இப்போது தேர்தலில் தோற்று வீட்டில் இருக்கும் போது புதிய ஞானம் வந்து பேசுகிறார்.
எம்மை பொறுத்த வரை எமது கட்சிக்கு மக்கள் அதிகாரம் தரும் பட்சத்தில், நாம் மஹிந்த அரசின் பங்காளி என்ற வகையில் மூன்று மாதத்தினுள் கல்முனை பிரச்சினையை மஹிந்த தரப்பின் மூலம் தீர்த்து வைப்போம் என்பதை சொல்லிக்கொள்கிறோம் என்றார்.