அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கு அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், மாவட்ட இணைப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீதான கீழ்த்தரமான அவதூறுகளுக்கு எதிராக அதன் தாய்ச்சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளது.
இந்த அவதூறுகள் மூலம் வைத்திய அதிகாரிகளுக்கெதிராக பிரதேசவாதம் தூண்டப்படுவதாகவும் அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் இதனால் அச்சுறுத்தல் உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இது சம்பந்தமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய முன்னாள் அதிகாரிகள் இருவரில் சந்தேகம் நிலவுவதாகவும், முன்னாள் முக்கிய அதிகாரியின் முறைகேடுகளை எதிர்த்து முன்னின்று செயற்பட்டு அவரின் இடமாற்றத்துக்கு முன்னின்று களப்பணியாற்றிய காரணத்துக்காகவே இவ்வாறான கீழ்த்தரமான அவதூறுகள் பரப்பபடுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கிளைச்சங்கத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீதி கிடைக்கும் வரை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னின்று செயற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.