நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரக்கிமு கங்கா | Surakimu Ganga" வேலைத்திட்டத்தின் (நிலைபேறான சூழலியல் முகாமைத்துவம் | Sustainable Environment Management) ஆரம்ப கட்ட நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷேக். எம்.எஸ்.எம். றஸ்ஸான் அவர்களின் தலைமையில் இன்று (03) புதன்கிழமை காலை இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சூழலியல் முகாமைத்துவத்தை மேம்படுத்தி இயற்கை வழங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வேலைத் திட்டமானது மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆறு மற்றும் ஆற்றுப் படுக்கைகளைப் பாதுகாப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக ஆற்றுப் படுக்கைகளில் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் அவர்கள் கலந்துசிறப்பித்ததோடு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் அவர்கள் இவ்வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கிவைத்தார்.
மேலும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட சூழலியல் உத்தியோகத்தர் எம்.ஐ.எம். இஷ்ஹாக் மற்றும் சூழலியல் உத்தியோகத்தர் ஏ.ஏ.எம். இர்பான் உள்ளிட்டோர் கலந்துகொண்டதோடு இவ்வேலைத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்கியதுடன், இறக்காமம் - 07 ஆம் பிரிவு கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம். அத்தீக், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், இவ் வேலைத் திட்டத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி வை.பி. யமீனா உட்பட பிரதேசத்தில் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.