மோசமான பாராளுமன்றமே தற்போது உள்ளது - அமைச்சர் தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 17 வருட காலப் பகுதியில் தான் பார்த்த மிக மோசமான பாராளுமன்றம் தற்போதைய பாராளுமன்றம் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புதிய நாடு எங்களுக்குத் தேவை என்றும் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு மனிதனுடனும் பேசக்கூடிய ஆளும் கட்சி உறுப்பினர்கள் எங்களுக்குத் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாகவும் சிலர் வீண் பேச்சுக்களைப் பேசுவதாகவும்,  அறிவார்ந்த அரசாங்கத்தை எதிர்பார்த்து மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வழங்கிய போதிலும் மாடுகள், அடிமுட்டாள்களைக் கொண்ட அணி பாராளுமன்றத்துக்கு வந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அடுத்து ஆட்சிக்கு வரும் தரப்பினர் பொருட்களின் விலைகளைக் குறைக்கப் போகிறோம் என்றால் அது முடியுமா?

டொலர் கையிருப்பில் இல்லை. நாம் டொலர்களை செலவு செய்து பொருட் களை இறக்குமதி செய்கிறோம். தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகள் இல்லை. நாம் அனை வரும் இணைந்து இதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

மக்கள் மிகப் பெரிய அர்ப்பணிப்புகளைச் செய்து வருகின்றனர். நாட்டின் தற்போதைய பாராளுமன்றம் குறித்து மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்.

கல்வி கற்ற மிகவும் புத்திசாலித்தனமானவர்கள் இம்முறை பாராளுமன்றத்திற்குச் செல்வார்கள் என எண்ணினர். மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வழங்கினர். எனினும் மக்கள் எதிர்பார்த்தது போல் புத்திசாலிகள் பாராளுமன்றத்தில் இல்லை என்றார்.

நன்றி - தினக்குரல்



மோசமான பாராளுமன்றமே தற்போது உள்ளது - அமைச்சர் தயாசிறி ஜயசேகர மோசமான பாராளுமன்றமே தற்போது உள்ளது - அமைச்சர் தயாசிறி ஜயசேகர Reviewed by Editor on November 08, 2021 Rating: 5