லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையார் நான்கு பேர் உயிரிழப்பு

லண்டனில் தென்கிழக்கு பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள், நான்கு வயது ஆண் குழந்தை மற்றும் 18 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தில் தாய், இரு பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.

மற்றும் ஒரு நபர் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (19)  இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மனைவி தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு தீப்பற்றியுள்ளதாக கதறியுள்ளார்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்ட போதிலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

யோகன் தங்கவடிவேல் என்று அழைக்கப்படும் கணவர், தனது குடும்பத்தினரை இழந்த நிலையில், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகள் அங்கிருந்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யோகன் பணியிலிருந்த போது, அவரது மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் பீதியடைந்த குரலில் அவர், ‘நெருப்பு… நெருப்பு’ என கத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரது தாய் இன்றைய தினம் இலங்கை திரும்பவிருந்த நிலையில், அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த திருகோணமலை மற்றும் லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட நாகரஜனி வசந்தராஜா மற்றும் அவரது மகள், இரண்டு பேரப்பிள்ளைகள் என நான்கு பேர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தீவிபத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.    







லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையார் நான்கு பேர் உயிரிழப்பு லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையார் நான்கு பேர் உயிரிழப்பு Reviewed by Editor on November 20, 2021 Rating: 5