இலங்கையில் கிடைத்துள்ள உலகில் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல்லின் உரிமையாளர் ஊடகங்களில் தோன்றியுள்ளார்.
ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள இந்த கல்லின் எடை 310 கிலோ கிராமாகும். இது Blue Sapphire ரகத்தை சேர்ந்தது.
இரத்தினபுரி பட்டகெதர பிரதேசத்தில் கிடைத்த இந்த மாணிக்கக் கல் ஜிமாலொஜிக்கல் இன்ஸ்டியூட் என்ட் ரிசேர்ச் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்திற்கு சொந்தமானது என தேசிய மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாணிக்கக் கல் தற்போது ஹொரணை பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மாணிக்கக்கல் அகழ்ந்து எடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக குறித்த இடத்தை கூற கல்லின் உரிமையாளர் விரும்பவில்லை.
“நாங்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் அகழ்வு பணிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். அந்த இடம் பற்றிய தகவலை வெளியிட்டால், அதற்கு தடையேற்படலாம்” என நீல மாணிக்கக் கல்லின் உரிமையாளரான எமில் சுரங்க (Amil Suranga) தெரிவித்துள்ளார்.
இது Blue Sapphire ரகத்தை சேர்ந்தது. தற்போது இலங்கையில் காணப்படும் பொருளாதார பிரச்சினை காரணமாகவே இதனை வெளிகொணர தீர்மானித்தோம். மிக அதிகமான விலைக்கு உலகில் உள்ள கொள்வனவாளருக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
முன்வைக்கப்படும் அதிக விலைக்கு கல் விற்பனை செய்யப்படும். 310 கிலோ கிராம் எடை இந்த கல்லில் ஒரு கிலோ கிராம் எடை கொண்ட Blue Sapphire கிடைத்தால் சுமார் 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியாக இருக்கும்.
ஒரு கிலோ கிராமை விட அதிகம் இருந்தால், அதன் பெறுமதி மேலும் அதிகரிக்கும். இதனை செதுக்கி, உள்ளே இருக்கும் நீல கல்லை எடுப்பது முக்கியமல்ல.இப்படியான கனிமங்கள் உலகில் கிடைப்பது மிகவும் அரிது.
அதுவும் இலங்கையில். இந்த கல் அருங்காட்சியகத்திற்கே பொருத்தமானது. அப்போது எதிர்கால சந்ததியினர் பார்க்க முடியும் எனவும் மாணிக்கக் கல் ஆராய்ச்சியாளருமான எமில் சுரங்க தெரிவித்துள்ளார்.