நாட்டுக்காக உரிய கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் நாடு பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. புதிய ஆண்டும் சவால் மிக்கதாக அமையும். நாட்டில் காணப்படும் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற வளாகத்தில் இன்று (03) திங்கட்கிழமை நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்கள் சத்தியப்பிரமாணம்/உறுதியுரை எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சபாநாயகர் வலியுறுத்தினார்.
பாராளுமன்ற பிரதான நுழைவாயிலின் வாசல் படிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கௌரவ சபாநாயகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதன் பின்னர் பாராளுமன்றத்தின் சகல பணியாளர்களும் அரசசேவை உறுதியுரை /சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக குறிப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் காணப்பட்ட சவால்களை சிறந்த முறையில் முறியடிப்பதற்கு பாராளுமன்றத்தால் முடிந்தது. அத்துடன் கொவிட்-19 சூழ்நிலையில் காணப்படும் சவால்களுக்கு முகங்கொடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புடன் செயற்பட்டமையாலேயே கடந்த வருடத்தில் சவால்களை வெற்றிகொள்ள முடிந்தது. பாராளுமன்ற செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க பாராளுமன்ற பணியாளர்களின் உயர்ந்த நிபுணத்துவமே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட் -19 சவால்களை வெற்றிகொள்வதற்கு தனிப்பட்ட ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் காணப்படும் பொறுப்புக்கள் குறித்து பாராளுமன்ற மருத்துவ நிலையத்தின் வைத்திய அதிகாரி ரி.ஆர்.பதிரன இங்கு கருத்துத் தெரிவித்தார். நல்ல சுகாதார பழக்கவழக்கங்கள் மூலம் கொவிட் 19 சவாலை சமாளிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசத்தை அணிவது மற்றும் சவர்காரமிட்டு அடிக்கடி கைகளைக் கழுவுவதன் முக்கியம் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே.ஜயதிலக, பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.