நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த 3ஆவது மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் செயலிழந்த இந்த மின்பிறப்பாக்கி தொகுதி சீர்செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மின்கட்டமைப்பில் 160 MW மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேவையான எரிபொருள் இன்மை காரணமாக மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (27) இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுக்கு அமைய இன்று (31) வரை மின்வெட்டு அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்திற்கு அமைய, இன்றையதினம் மீண்டும் மீளாய்வு நடாத்தப்படவுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் திட்டமிட்ட வகையிலான மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று பிற்பகல் அறிவிக்கப்பட உறுதியான அறிக்கை வெளியிடப்படும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
(தினகரன்)