இலங்கை கலாச்சார திணைக்களம் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நிகழ்ச்சிகளை தேசிய ரீதியில் நடாத்தி வருகின்றது. அந்தவகையில் பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்படும் கலை இலக்கிய விழாவானது மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணாமாக 2021ஆம் ஆண்டுக்கான இறக்காமம் பிரதேச இலக்கிய விழாவானது பிற்போடப்பட்டிருந்தது.
2021ஆம் ஆண்டுக்கான இறக்காமம் பிரதேச இலக்கிய விழாவானது, கலாச்சார அதிகார சபையின் ஏற்பாட்டில் இன்று (02) புதன்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளரும் இறக்காமம் கலாசார அதிகார சபையின் தலைவருமான அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கணக்காளர் திருமதி றிம்ஸியா அர்ஷாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் எச்.பி. இந்திரசிறி யசரட்ன, மாவாட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ. எம். றிம்ஷான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
பிரதேச மட்டத்தில் இடம்பெற்ற கலை இலக்கியப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் திறந்த பிரிவில் வெற்றியீட்டிய கலைஞர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கிய மூத்த கலைஞர் கலாபூசனம் பி.டி. யாசீன்பாவா, ஐ. ஹுசைன் றிஸ்வி, ஏ.எல். ஹாறூன், ஜனாபா. பர்சானா றியாஸ் ஆகியோரும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2021 ஆம் ஆண்டுக்கான இறக்காமம் பிரதேச இலக்கிய விழா நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக, சது அமீரலிபுர வித்தியாலய மாணவர்களின் பொல்லடிக் குழுவினுடைய கிராமிய கோலாட்டம் இடம்பெற்றது.
மேலும் மாணிக்கமடு கலை மன்றத்தின் தமிழ் பாரம்பரிய நடனமும், எச். நதீகா குமாரி அவர்களின் பயிற்றுவிப்பில் சிங்கள நடனக் குழுவினர், தங்கள் பாரம்பரிய கலாச்சார கண்டி நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.