மிரிஹானவில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
மிரிஹானையில் கடந்த வியாழனன்று (31) இரவு இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி திரட்டுவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டது குறித்தும் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமது கடமையை நிறைவேற்றுவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது மட்டுமன்றி, கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகக் கடமையை நிறைவேற்றச் சென்ற ஊடகவியலாளர்கள் தமது அடையாள அட்டைகளைக் காண்பித்தும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணைகள் நடாத்தி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாது இருப்பதை உறுதிப்படுத்துமாறும், குறிப்பாக ஊடகவியலாளர்கள் இவ்வாறான கட்டங்களில் தமது கடமைகளைச் செய்வதற்கு போதிய பாதுகாப்பினை வழங்குமாறும் பொலிஸ்மா அதிபரையும், ஊடக அமைச்சரையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
April 03, 2022
Rating:
