சாய்ந்தமருது மக்களோடு இருப்போம்


(ஹாசீம் முஹம்மட் நிசாம்)

சுதந்திரத்திற்கு முன்னரான காலத்தில் இருந்தே சாய்ந்தமருது பிரதேசம், கரைவாகு தெற்கு கிராம சபையாக தனித்து இயங்கியது.1987ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியால் கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி சட்ட மூலத்திற்கு அமைய கிராம சபைகள், பிரதேச சபை என்ற வகுப்பிற்கு மாற்றப்பட்டது. இதன் போது கரைவாகு கிராம சபையாக இயங்கிய சாய்ந்தமருது பிரதேசம், கல்முனையுடன் இணைக்கப்பட்டு, கல்முனை மாநகர சபை என உருவாக்கப்பட்டது.

எந்த பிரச்சினையும் இல்லாமல் 20 வருடங்களாக ஒற்றுமையாக இருந்த ஊர்களுக்கிடையில், அரசியல் தேவைக்காக, அரசியல் வாதிகளால் திட்டமிட்டு பிரிவினைகள் விதைக்கப்பட்டது. இதனால், சாய்ந்தமருது மக்கள், கல்முனை மாநகர சபையால், புறக்கணிக்கப்பட்டனர். சாய்ந்தமருது மக்கள், கல்முனை சந்தையில் வியாபாரம் செய்வதில் இருந்து தடுக்கப்பட்டனர்.

இந்த பிரிவினையை இல்லாமலாக்க வேண்டியவர்கள், பிரிவினையை மேலும் வளர்த்தார்கள். இதனால், சாய்ந்தமருது மக்கள், 1987ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைக்கு மாறிக்கொள்ள விரும்பினர். தங்களுக்கென்ற தனியான ஒரு உள்ளூராட்சி மன்றத்தை வேண்டி போராடினார்கள்.

உள்ளூராட்சி மன்றம் தருகிறோம் என அம்மக்களை தொடர்ந்து ஏமாற்றிய அரசியல் வாதிகள், மக்களுக்காக எதுவும் செய்ய முனையவில்லை. இதனால், சாய்ந்தமருது மக்கள் பல் வேறுபட்ட ஏமாற்றங்களுக்கும், மன வேதனை களுக்குள்ளும் சிக்கி தவித்தார்கள்.

அண்மையில் அவர்களின் தேவை நிறைவேறி, அதனை கொண்டாடினார்கள். மீண்டும் அரசியல் காழ்ப்புணர்வுகளால்,நகர சபை உத்தரவு தற்காலிகமாக தடை செய்யப்படாடுள்ளது. இவ்வாறான நிலையில் அம் மக்களின் மன வேதனையை புரிய முடிகிறது.

ஆனால், இந்நிலையை சாதமாக பயன்படுத்தி சில அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட நம் முஸ்லிம்கள் கூட, அம் மக்களின் வேதனையை கொண்டாடித் தீர்க்கின்றனர். பதிவுகளாலும், மீம்ஸ்களாலும், வீடியோக்களாலும், சாய்ந்த மருது மக்களின் உணர்வு பூர்வமான தேவையை கேலி செய்து, பரிகாசம் செய்து,  காழ்ப்புணர்வைக் கொட்டி, ஊடகங்களில் பதிவிடுகின்றனர்.

அதிலும் விஷேடமாக தங்களை பெரிய மனிதர்களாக காட்டிக்கொண்ட பலர், சிறுபிள்ளைத்தனமாக நடக்கின்றதைப் பார்க்கும் போது மனது கனக்கிறது.

சாய்ந்தமருது மக்களின் உணர்பூர்வமான தேவையை புரிந்து கொள்ள முடியாத இந்த காழ்ப்புணர்வு வாதிகளின் கேலி, பரிகாசங்களினால், அம் மக்கள் மன வேதனை அடையாமல் இருக்கவும், இந்த சந்தர்ப்பத்தில் உறுதியான மன நிலையை அவர்கள் பெற்றுக் கொள்ளவும், அவர்களின் தேவை நிறைவேறவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்வானாக!!!
சாய்ந்தமருது மக்களோடு இருப்போம் சாய்ந்தமருது மக்களோடு இருப்போம் Reviewed by Editor on February 20, 2020 Rating: 5