(நேர்கண்டவர்: வாசுகி சிவக்குமார்)
- திரும்பத் திரும்பப் படிக்கும்போது வேட்கையும் காதலும் மேலெழும் தனிமை, பதற்றம், பீதி நிறைந்த வாழ்வை நெருக்கமாகத் தரிசிக்;கும் கவிதைகள் உங்களுடையவை. உங்களை வடிவமைத்த சூழலும் அத்துணை அடக்குமுறைகளும் நெருக்குதல்களும் நிறைந்ததா?
என்னை வடிவமைத்த சூழலைப் பற்றி கூறுவதானால், எனது ஊர் சாய்ந்தமருது, வயலும் கடலும் சூழ்ந்த நிலம். மருத மரங்கள் நிறைந்த சாந்தமான ஊர் எனவும் குறிப்பிடலாம்.
நான் மிகவும் நேசிக்கும் எனது தந்தை, ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியர். என்னுடைய தாய் தொழில் செய்யாவிடிலும், நிர்வாகத் திறன்மிக்க பெண் ஆளுமை. நான்கு பெண், நான்கு ஆண் பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பத்தில், நான் மூன்றாவது பெண்.
இஸ்லாமியப் பாரம்பரியங்கள் வலுவாக அமைந்த குடும்பம். இலக்கியம் சார்ந்த அறிமுகங்களுடன் எவரும் இருக்கவில்லை. ஆயினும் எனது வீட்டில் இசை வளம் இருந்தது. அது அரபு மொழியுடன் இணைந்ததாக மாத்திரம் காணப்பட்டது.
எனது பிரதேசத்தில் 1990 காலகட்டமானது ஆழமான மனக்காயங்களை உண்டுபண்ணிய காலங்களாகும். கலவரங்களாலும், வன்முறைகளாலும் நிரம்பிய, பீதிநிறைந்த அந்நாட்களை பெரும் சாபம் நிறைந்தது என்று தான் சொல்ல முடியும். பல துயரச் சம்பவங்களை கண்டிருக்கின்றேன். அதன் மிக கணிசமான அனுபவங்களோடுதான் எனது இளமையை என்னால் நினைவு கூர முடியும்.
தவிர, 1991ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியை இடைநிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகுதான் எனக்குள் தனிமை கவிந்தது எனலாம். பின்னர் எல்லாமே நெருக்குதல்களாகவே தோன்ற தொடங்கிவிட்டன. வெளியில் செல்லக் கிடைத்த ஒரே வாய்ப்பு பாடசாலை மாத்திரமே. அது பறிபோன துக்கம் இப்போதும் நெஞ்சுக்குள் பெரும் இழப்பாய் மீதமுள்ளது. இந்த நிலையில் தான், நான் எனக்குள்ளே பேசத் துவங்கினேன்.
வாழ்வின் காதலை, இருப்பின் வேட்கையை அவாவினேன். கவிதை அனைத்தையும் எனக்கு சாத்தியமாக்கியது. கவிதைக்குள் நான், என் விடுதலையை கண்டெடுத்தேன். அதன் மூலம் எனக்கான சுதந்திரத்தை அனுபவித்தேன்.
அன்றய போரின் நெருக்குதல்களாலும், பீதியாலும் உள்ளார்ந்த இறுக்கங்களாலும் தன்னிரக்கம் மிக்க தனிமையாலும், ஆக்கிரமிக்கப்பட்ட காலங்களை கடந்து வந்துவிட்டேன்.
என் அகவெளியை கவிதை மொழிகளால் விரித்து வைத்திருக்கின்றேன். அங்கே எனக்கான உலகம் எல்லாவித சாத்தியங்களாலும் ஆக்கப்பட்டிருக்கின்றது.
இன்றய என்னுடைய நாள் இவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டும், அத்தகைய சூழல்களிருந்து பெரிதும் மாறுபட்டும் போய்விட்டது. அதை முழுக்கச் சாத்தியப்படுத்தியவர் எனது கணவராகும்.
இப்போது நான் வெறுமனே தனிமையை, இயலாமையை கட்டியழும் பெண்ணுமல்ல.
- பொதுவான பெண் கவிதைகள் ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேச உங்கள் கவிதைகள் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பதாகச் சொல்லலாமா?
நமது நாட்டில், 1980களின் காலகட்டத்தில் பெண் மொழியின் தனித்துவமான புதிய பாய்ச்சலாக சிவரமணி, செல்வி, ஊர்வசி, சங்கரி கவிதைகள் இருந்தன. பிறகு நீண்ட தேக்க நிலைதான் காணப்பட்டது.
கவிதைகள் எழுதும் பெண்கள் இருந்த போதிலும், தனித்துவமான பெண் மொழியின் வெளிப்பாடோ, பெண் அரசியலோ வெளிப்படும் வகையான எழுத்துக்கள் அரிதாகவே இருந்திருக்கின்றன.
ஒளவை, ஆகர்ஷயா, ஆழியாள் என சிலர் மிக ஆளுமையுடன் வெளிப்பட்டார்கள். அறிவு பூர்வமான ஆழியாளின் கவிதைகளில் பெண்மொழியின் தீவிரம் மிகுந்திருந்தது. இப்போதென்றால் பல பெண்கள் தனித் திறமைகளோடு இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர் பெண்ணியா, வேறுசில புலம் பெயர்ந்த பெண் கவிஞர்களையும் கூற முடியும்.
2004 இல் வெளியான 'ஓவியம் வரையாத தூரிகை' என்ற, எனது முதல் தொகுதியின் பிற்பாடுதான் தீவிரமாகவும், அதிகமாகவும் புதிய மாற்றங்களோடும் எழுத தொடங்கினேன்.
பெண் மனவெளியை, அதன் வீரியமான எழுச்சியை, பொங்கும் பிரவாகத்தை என்னுள் உணரத் தொடங்கினேன். கவிதை நுன்ணுர்வுகளுடன் சம்மந்தப்பட்டது. அனுபவங்களுக்கூடாகவும், வாசிப்பு மற்றும் தேடல், புதிய சிந்தனைக்கு தூண்டப்படுதல் போன்றவற்றினாலும் நிகழ்வது. என்னுடைய கவிதைகள் தமக்கு அதிகபட்ச உரிமைகளை எடுத்துக்கொள்ள நான் எப்போதும் அனுமதிக்கிறேன்.
எனது கவிதைகளில் உணர்வின் குரலை, அழகின் பாடலை, வாழ்வின் ருசியை, மொழியின் கனவை அதன் உறையும் மௌனத்தை, நோவை பதிந்து வருகிறேன். மேலும் கூறினால், எதிர்ப்பின் வேறொரு வடிவமாக... கொண்டாட்டமானதாக, எல்லையற்றதாக கவிதையை வாழ்கிறேன்.
- பெண்மொழி, பெண்ணிய சிந்தனைகளுக்கான முக்கியத்துவத்துக்கு மத்தியிலும் பெண் உறுப்பு பற்றிய சொற் பிரயோகங்களைத் தாங்கிய கவிதைகள் அதிக கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகின்றனவே ?
இவ்விடயத்தில் காணப்படும் விமர்சனம் மற்றும் கண்டனங்கள் எமது எழுத்துச் சூழலில் குறைந்த அளவே உள்ளது.
தமிழ் நாட்டு பெண்ணிய எழுத்தாளர்களான சுகிர்தராணி, சல்மா, குட்டிரேவதி போன்றோர், இந்த விடயத்தை அதிகமதிகம் எதிர் கொண்டவர்கள். நான் நினைக்கிறேன், பெண் தன் உடலைக் கொண்டாடி எழுதுவது வேறு, பெண் உறுப்புகளை சுட்டி எழுதுவது வேறு.
ஆரம்பத்தில் பெண் மொழியை சாத்தியமாக்கிக் காட்டிய, காரைக்கால் அம்மையார், ஆண்டாள், அப்போதே பெண் உறுப்புகளை சுட்டி எழுதியவர்கள் தாம். எனவே இது ஒரு புது விடயம் அல்ல.
சிலர் நினைக்கிறார்கள், பெண் உறுப்பை எழுதிவிட்டால் அது பெண்ணியம் அல்லது நவீன கவிதையாகி விடும் என்று. போதிய புரிதல்கள் இல்லாமல் வெற்று வார்த்தைகளுக்கு நடுவே அதிர்ச்சிக்காக இதனைப் பாவிப்பதை நான் மறுக்கிறேன்.
சில கவிதைகளைப் பாhத்தால், புகைப்படம் எடுத்தது போன்று அப்பட்டமாக எழுதப்பட்டிருக்கும். புகைப்படம் எடுப்பதும், கவிதை எழுதுவதும் ஒன்றாகுமா ? கவிதைக்கான நேர்மை என்ற ஒன்றையாவது பேண வேண்டாமா ?
மாறாக, ஒரு முழுமையான கலைப்படைப்பில், அது கொண்டுள்ள முக்கியத்துவத்தின் அடிப்படையில், இது வேறொரு அர்த்த தளத்தை உருவாக்குகின்றது. அதிர்வையும் கலகத்தையும் உண்டுபண்ணுகின்றது. ஆழமான உணர்வுகளுடன், நுட்பமாக எழுதப்படுகின்ற பெண் அரசியல் சார்ந்த கவிதைகளில் எதார்த்தமாக வெளிப்படும் இந்தச் சொற்பிரயோகங்களை, மாற்றுக் குரலாக நான் கருதுகிறேன்.
எடுத்துக்காட்டாக, குட்டிரேவதி 'முலைகள்' கவிதையில்,
'துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர் துளிகளாய்
தேங்கிக் தளும்புகின்றன' என்று எழுதுவதை,
வன்கொடுமைக்கு எதிராக, சரிநிகரில் எழுதப்பட்ட கலாவின் 'கோணேஸ்வரிகள்' கவிதையை,
சல்மாவின் கவிதையை, நிராகரிப்பதற்கு முடியுமா ?
இன்று நவீன தமிழ் கவிதைகள் உலகக் கவிதைகளுக்கு இணையான வீச்சுடன் எழுதப்படுகின்றன.
பெண்கவிதையின் முன் வென்றெடுக்கப்பட வேண்டிய சவால்கள் இன்னுமுள்ளன. கவிஞர்களிடம் இதற்காக, சுய அழிப்பும் உழைப்பும், அறிவாற்றலும் இன்று தேவையானதாக உள்ளது.
கண்டனம், விமர்சனம் என்ற வன்முறையான கூச்சல்களுக்கு மத்தியில் தான், பெண் தன் குரலை வலிமையாக உயர்த்த வேண்டியிருக்கிறது.
சுயமும் தன்னம்பிக்கையுமுள்ள பெண்கள் போலித்தனமான அவலச் சத்தங்களை, கணக்கிலெடுப்பதுமில்லை !
- ஈழத்துப் பெண்களின் ஷபெயல் மணக்கும் பொழுதுகள்| தொகுப்பில் உங்கள் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இதில் சில ஆண் கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருப்பது பற்றி....
ஆம், இது பற்றிய விமர்சனங்கள், விவாதங்கள் அண்மையில் இணையதளங்கள் வாயிலாகவும், இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஊடாகவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாலதி மைத்ரியின் 'அணங்கு' சிற்றிதழை முக்கியமாகக் கூறமுடியும்.
ஏன் சில ஆண் கவிஞர்கள் பெண் பெயரை பாவித்து எழுதுகிறார்கள் ? ஏன் அவர்கள் வேறொரு ஆண்பெயரை பாவிப்பதில்லை ? அல்லது ஆண்இ பெண் அடையாளமற்று ஒரு பொதுப் பெயரில் எழுதக்கூடாது ? என்ற வினாக்களெல்லாம் நியாயமானவையே ....
எந்த அங்கீகாரத்தை நோக்கி அல்லது யாரைத் திருப்திக்குள்ளாக்க, பெண் பெயரை வைத்து எழுதுகின்றார்கள் ? அத்தகைய ஆண்களால் இது குறித்து தகுந்த விளக்கங்கள் வழங்கப்படவுமில்லை.
பெண்களோடு பெண்களாய் கலந்து, அவர்தம் உணர்வுகளை தம் உணர்வுகளாக உள்ளுணர்ந்து, பெண்களின் பாடுகளில் பங்கெடுத்துப் பார்க்கும் நல்லெண்ணத்திலோ என்னவோ! இத்தகைய நல்லெண்ணங்களோடு ஒரு சில ஆண்கள் கலைச்சேவை செய்கின்றனர்! இவர்களைப் பார்த்து நாம் என்ன சொல்வது ? அவர்களை அவர்களே உள்ளார்ந்து பார்ப்பார்களானால், மோசடியின் மற்றொரு முகம் தெளிவாகத் தெரியும்.
- பெண் எழுத்தை ஆண் எழுதுவதை நிராகரிக்கத்தான் வேண்டுமா?
ஆணாக இருந்து, பெண்களுக்கான விடுதலையை கருத்தில் கொண்டு, முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தி எழுதியவர்கள் பெரியார், பாரதியார், பாரதிதாசன் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.
அண்மைக் காலத்தில், ரமேஸ் - பிரேம் கட்டுரைகள் கூட பெண்ணிய புரிதலுடன் முன்வைக்கப்படும் வலுவான நவீன கருத்தாடல்களாக அமைந்திருப்பவை. இதுபோன்ற தொடர்ச்சியை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது. தன் ஆண் அடையாளத்தை முற்றாக மறைத்துக் கொண்டு பெண் பெயரில், பெண் வேடமிட்ட எழுத்துக்கள் நிராகரிக்கப்பட வேண்டியவையே. இருந்தபோதிலும் ஆமிரபாலி, ஒரு ஆணாக இருந்து, பெண் பெயரை பாவித்து எழுதியமைக்கும், ரங்கராஜன், சுஜாதாவாக மாறி பெண் பெயரில் எழுதியமைக்கும் வௌ;வேறு காரணங்கள், வௌ;வேறு நோக்கங்கள் இருந்திருக்கமுடியும் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
தலித் எழுத்து, திருநங்கையர் எழுத்து, பெண்ணிய எழுத்து என்பதுபோல், ஆண் பெண்ணாக உணரும் எழுத்து, பெண் பெயரில் எழுதுகின்ற ஆண்களின் எழுத்து எனும் தெளிவான அடையாளத்துடன் தம் படைப்புக்களை வெளிப்படுத்த, அவர்கள் முன்வரவேண்டும். அவ்வெழுத்துக்களின் விழைவை வேறுபடுத்தும் வகையில், அதை ஒரு குழுவாக அல்லது தனிச் செயற்பாடாக வெளிப்படுத்துவது, பெண் எழுத்துக்களுக்குள் ஊடுருவல் செய்வதைவிட சிறந்தது என நினைக்கின்றேன்.
அன்றய கடுமையான ஆணாதிக்க காலத்தில், பெண் விடுதலைக்கான கருத்துக்களைச் சொன்ன பாரதியாருக்கோÆபெரியாருக்கோ பெண் பெயர் தேவைப்படவில்லை. பெருமளவில் அவர்கள் நடைமுறையில் செயற்படுத்திக் காட்டவும் தயக்கப்படவுமில்லை.
பெண் எழுத்தை இன்று எழுத வருகின்ற ஆண் எழுத்தாளர்களுக்கு, பெண் பெயரும் தேவைப்படுகின்றது !
பாரதியைப்போல, பெரியாரைப்போல வெளிப்படையாக தம்முடைய செயல்முறைகளை வைத்திருப்பவர்களாகவும் இவர்கள் இல்லை.
- ஒரிஸாவில் இடம்பெற்ற இளம் கவிஞர்களுக்கான மாநாட்டில் பங்குபற்றியிருக்கின்றீர்கள். இது உங்கள் முதல்வெளிநாட்டுப் பயணமாகவும் இருந்திருக்கலாம். நீங்கள் மாநாட்டுக்குத் தெரிவு செய்யப்பட்டமை, இலக்கிய வட்டாரங்களில் அதற்கான ஆதரவு எப்படியிருந்தது?
கடந்த பெப்ரவரி 20, 2008 இல் சார்க் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளம் கவிஞர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள, கணவருடன் இந்தியா சென்றிருந்தேன். இலக்கிய ரீதியான முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான்.
இலங்கையிலிருந்து, மூன்று கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் தமிழ் கவிஞராக தேர்வு செய்யப்பட்டிருந்தது நான் மாத்திரமே.
புகழ்பெற்ற பழம்பெரும் பெண் நாவலாசிரியரும், எழுத்தாளருமான 'அஜித் கௌர்' என்வர் இவ்வமைப்பின் தலைவியாகவிருக்கிறார்.
இம்மாநாடு ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் என்ற இடத்தில் 22ஆம் திகதி ஆரம்பமாகி, தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்றன. மிகச் சிறந்த திட்டமிடல்களுடன் ஒவ்வொரு நாளையும் புதிய அனுபவங்களாக்கி இருந்தார்கள். இயற்கை அழகுகள் மாறாத ஒரிசா கலைஞர்களுக்கும், கலை வெளிப்பாட்டிற்கும் பொருத்தமான, அற்புதமான இடமாகும். வீடுகளைவிட, கோயில்களும், சிற்பங்களும் அங்கு நிறைந்திருந்தன.
மிகப் பிரசித்திபெற்ற பிரம்மாண்டமான 'சூரியக் கோயில்' கோணெக் எனும் இடத்தில் இருக்கின்றது. அதனுள் அமைக்கப்பட்ட கருங்கற் சிற்பங்களை பெரும் மலைப்புடன் பார்த்தேன். அந்த உவகையான சிலிர்ப்பான கணங்கள் அபூர்வமானது.
மேலும், 'கட்டக்' எனும் இடத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான 'ரவின்சா' பல்கலைக் கழகத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டோம். அம்மாணவர்கள் முன்னிலையில் கவிதைகள் வாசித்தோம், கலந்துரையாடினோம். சுமார் 65 கவிஞர்கள் ஒன்று கூடியிருந்த இவ்விழாவில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிருந்தும் பல மொழிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். ஏனைய நாடுகளில் இருந்து அழைக்கப்பட்ட 23 கவிஞர்கள் அடங்கலாக.
'பூரி' என்று அழைக்கப்படும் ஊர், பெரிதும் வித்தியாசமானது. அவர்களது கலாச்சார பண்பாடுகள், உணவு, வாழ்க்கை முறைகள் முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டது. இப்படி ... அனைத்து நாட்டுக் கவிஞர்களின் பாரம்பரியங்கள் ... அவர்களது மொழிகள் ... ஆப்கானிஸ்தான் கவிஞர்களின் கவிதைகள் தந்த அதிர்வுகள் ... இவ்விதமாக நிறய சொல்ல முடியும். அந்த புதிய நாட்கள் என்னைப் பொறுத்தவரை மிகுந்த பயனுள்ளதென்று தான் கூறுவேன்.
உங்கள் கேள்வியில், மாநாட்டுக்கு தெரிவு செய்யப்பட்டமை பற்றி கேட்டிருந்தீர்கள் .... இதில் பல சங்கடங்களை நான் எதிர்கொண்டேன்.
இலங்கையிலிருந்து மூன்று கவிஞர்கள் தெரிவாகியிருந்தோம். இதில் இரண்டு சிங்களமொழிக் கவிஞர்களும், தமிழ்மொழிக் கவிஞராக நானும். எங்கள் மூவருக்கும் ஒரேவிதமான அழைப்பையே சார்க் அமைப்பின் தெரிவுக்குழு அனுப்பியிருந்தது. அதில் எங்களுக்கான விமான டிக்கட்டை கலாசார அமைச்சின் ஊடாக பெறுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய, இந்த அழைப்பின் பிரதியை வைத்து அமைச்சுக்கு ஒருமடலும் அனுப்பியிருந்தேன்.
இதன் பிறகு, இது பற்றி அறிவதற்காக அமைச்சை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'உங்களது மடல் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்றும், இது பற்றிப்பேச நேரில் வந்து சந்திக்குமாறும் கூறினார்கள். பின்னர் கொழும்பு சென்று, காலாசார அமைச்சின், வெளிநாட்டு கலாசார அலுவல்களுக்குப் பொறுப்பாக இருந்த, ஒரு பெண் அதிகாரியை சந்தித்தோம். அதற்கு அவர் 'இப்படி ஒரு நிகழ்விற்காக நாங்கள் விமான டிக்கட் இதுவரை வழங்கவில்லை' என்றும், இது பற்றி உங்கள் முஸ்லீம் கலாசார அமைச்சு உங்களை அடையாளப்படுத்தவில்லை என கூறியதோடு, எனது சொந்தப் பணத்தில் செல்லுமாறும் அப்பெண் எனக்கு ஆலோசனை தந்தார்.
இதுபற்றி எனது பிரதேச பிரதி அமைச்சருடன் பேசியிருக்கிறேன். முஸ்லீம் கலாசார அமைச்சின் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். எல்லோருமே ' முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடக்காததனால், எனக்கு விமான டிக்கட் தர முடியாது என கலாசார அமைச்சு கூறுவதாக சொல்லிவிட்டனர்.
ஆனால், நான் இறுதியாக கலாச்சார அமைச்சில் இதுபற்றி மீண்டும் கதைத்துக் கொண்டிருக்கையிலேயே, எங்கள் கண் முன்னே அந்த இரண்டு சிங்களமொழிக் கவிஞர்களும், வெளிநாட்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட விமான டிக்கட்டினை பெற்றுக்கொண்டு பெருமிதமாகவும், மகிழ்வுடனும் சென்றனர்.
நான் ஒரு தமிழ் மொழி எழுத்தாளர் என்பதாலா ? நான் ஒரு பெண் என்பதாலா ? அல்லது நான் முஸ்லீம் என்பதாலா ? அவர்கள் எனக்குரிய விமான டிக்கட்டை தரமறுத்தனர் !!
அப்பயணத்தை மேற்கொள்ள, பட்ட அவஸ்த்தைகள் என்னுள் வேறொரு அனுபவாமாக இருக்கிறது.
அடுத்து இலக்கிய வட்டாரங்களின் ஆதரவு பற்றி கேட்டிருந்தீர்கள் ! இலக்கிய வட்டாரங்களின் ஆதரவு என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏனெனில், எந்த இலக்கிய வட்டாரங்களோடும், என்னை நான் இணைத்துக் கொள்ளவில்லை. இவ்விடயத்தில் நன்றிக்கும் அப்பாற்பட்டதாக, மிகப் பெறுமதியானதாக நான் குறிப்பிட விரும்புவது, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், எழுத்தாளர் உமா வரதராஜன், கவிஞர். சேரன் இவர்களைத் தான்.
அதே போல் எனது கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து உதவியது ஆத்மா, சுமதி, சன்முகம் சிவலிங்கம், தவசஜிதரன் ஆகியோர். அத்தோடு ஹரி, அறபாத், எஸ்.எல்.எம். ஹனீபா, காலச்சுவடு கண்ணன், ரவிக்குமார் என அனைத்து நண்பர்களது ஆதரவும் அளவற்றது ... அதை நான் மதிக்கின்றேன்.
- உங்கள் கருத்துக்கள், கவிதைகள் மாநாட்டில் கவனிப்புப் பெற்றிருந்தனவா?
அங்கே உயர்மட்ட கலா பூர்வமான அம்மாநாட்டு அமர்வுகள், புதுவிதமான திட்டமிடல்களால், நவீனமான வகையிலும் பாரம்பரிய வெளிப்பாடுகள் கொண்டதான, இயற்கையான பண்பாட்டு அம்சங்களாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருந்த கவிஞர்கள் அனைவரும், கல்விப் புலமைமிக்கவர்களாகவும், மேலதிக கலை ஆளுமை கொண்டவர்களாகவும் இருந்தனர். திரைப்படத்துறை, இசைத்துறை, நாட்டாரியல், நடனம் பத்திரிகைத்துறை இவ்விதம் ...
மாநாட்டின் முதல்நாள் இரவு விருந்துக்குப் பிறகு, நான் கவிதை வாசிப்தற்காக அழைக்கப்பட்டேன். 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்' என்ற கவிதையை வாசித்தேன். அது அங்கு அனைவரையம் பாதித்த ஒரு கவிதையாக இருந்தது. எனது கவிதைகளின் பிரதிகளை தத்தமது தாய் மொழியில் மொழியாக்கம் செய்யவும், அந்தந்த நாடுகளில் பிரசுரிக்கவும் என கவிஞர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
எனது கவிதை மொழியில் வித்தியாசமான அழகும், ஆழமான கருத்தும் ஊன்றியிருப்பதாக பாராட்டினர். இந்தளவு பெரிய அங்கீகாரம் அங்கு வந்த, பிற கவிஞர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பங்களாதேஷ; பெண் கவிஞரும், குறுந்திரைப்பட இயக்குனருமான பர்ஹானா பேசும்போது 'தான் என்னைப் போன்ற பெண்ணாக வாழ விரும்புவதாக' கூறினார். இறுதி நாளன்று, இவ்வமைப்பின் பிரதம ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சந்ரபானு பட்நாயக் பேசும்போது ' என்னுடைய பங்களிப்பை, முக்கியத்துவம் வாய்ந்ததாக, தான் கருதுவதாக குறிப்பிட்டடார். இப்பயணத்தையிட்டு பூரண நிறைவோடும் மகிழ்வோடும் இருக்கிறேன்.
- குழுக்களாகப் பிரிந்து செயற்படுவது இலக்கியத்துறையில் அதிகளவு காணப்படுகின்றது. உங்கள் கவிதைச் செயற்பாடுகளை அவை பாதித்தனவா?
குழுக்களாக செயல்படுவது இலக்கிய உலகில் அவசியமான ஒன்றா ?அவசியமற்றதா ? என்பதை குழுக்களின் செயற்பாடுகளே தீர்மானிக்கின்றன. இலக்கிய குழு ஒன்று, சமூகத்தில் செலுத்தும் தாக்கத்தை, முக்கியத்துவத்தை, தவிர்க்க முடியாத செல்வாக்கை வைத்தே அக்குழுவின் உண்மைத் தன்மையை உணரலாம்.
பெரும்பாலான குழுக்கள் சாதித்த ஆக்கபூர்வமான விடயங்களை விட, கசப்பான, விரும்பத்தகாத விடயங்களை பட்டியலிடமுடியும். நம் மத்தியில் பக்குவமற்ற இலக்கியக் குழுக்கள் எழுவதும், மடிவதுமாக இருக்கின்றன. அதனால் தான் எனக்கு இதில் எப்போதுமே ஆர்வமில்லை.
மனித நுன் உணர்வுகளை, மனிதத்துவப் பண்புகளை புண்படுத்தாத, பாரபட்சமின்றி மதிக்கத்தெரிந்த குழுவாக யார் செயல்படுகின்றார்களோ, அத்தகைய குழுக்களோடு உடன்பாடு கொண்டவளாகவும், இதில் கரிசனமற்ற குழுக்களுடன் உடன்பட மறுப்பவளாகவும் இருக்கிறேன். இலக்கியக் குழுக்களை உருவாக்கும் ஆண்களோÆபெண்களோ யாராயினும் சிலர், குழுவின் கொள்கைகளை, விருப்பு வெறுப்புகளை படைப்பாளர்களின் முதுகில் சுமத்தவே முனைகின்றன. படைப்பாளருடைய சுயத்திற்கு மதிப்பளிக்கும் மனம் குழுக்களிடத்தில் இல்லை. இத்தகைய குழுக்களை திருப்திப் படுத்துவதோ மரசங்கள் செய்வதோ நமது வேலையல்ல.
எந்தக் குழுவிற்காகவும் நாம் கவிதைகள் எழுதமுடியாது. அதேபோல் எந்தக் குழுவாலும் ஒருவர் கவிதை எழுதுவதை தடுக்கவும் முடியாது. என்னுடைய கவிதை செயற்பாடுகள் ஏதேனுமொரு குழுவால் மிக மோசமான புறக்கணிப்பிற்கு ஆழாக்கப்படும் அதே சமயத்தில், இன்னொரு குழுவால் போற்றப்படவும், கொண்டாடப்படவும் செய்கின்றது. இவ்விரண்டு வினைகளுக்கும் நான் பொறுப்பற்ற போதிலும், எனக்கென்று ஒழுங்குகள், நெகிழ்வுத் தன்மைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்மானிக்கின்றவளும் நானே.
எனது கவிதைச் செயற்பாடுகளை பாதிக்கின்ற நிகழ்வுகளை, உற்சாகமாக ஏற்றுக்கொள்கின்றவள் நான். அதனை உந்து சக்தியாக மாற்ற எனக்குத்தெரியும்
கவிஞர் அனாருடனான நேர்காணல்....
Reviewed by Editor
on
February 26, 2020
Rating:
Reviewed by Editor
on
February 26, 2020
Rating:
