தம்பி சிறாஜ் உன் திறமையை என்னவென்று பாராட்டுவேன்.... எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன்


அக்கரைப்பற்றில் கடந்த வெள்ளிக்கிழமை (21) முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற கிழக்கு புத்தக திருவிழா-2020 தொடர்பாக மூத்த கவிஞர் எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன், புத்தக திருவிழா கதாநாயகன் சிறாஜ் மஸ்ஊரின் சேவையை பாராட்டி தனது முகநூல் பக்கத்தில் வரைந்த சில வரிகள்....

தம்பி ஸிராஜ் மஷ்ஹுர்,

உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை உங்களது ஆக்கபூர்வமான "இலக்கிய புத்தகத் திருவிழா" செயற்பாட்டை நினைத்து நினைத்து பெருமிதம் அடைகின்றேன் மூன்று நாட்கள் ஒரு விழாவை நடத்துவது என்பது சாதாரணமான காரியமல்ல அதற்கு எவ்வளவோ அறிவும் ஆற்றலும் இருக்க வேண்டும் அதை உங்களுக்கு தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றேன்.
இந்த சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையை மனம் கொண்டு பாராட்டுகின்றேன்.
இது ஒரு காலத்தின் தேவை தேவையை அறிந்து காரியம் ஆற்றும் உங்களது கைங்கரியம் போற்றத்தக்கது.
வாசிப்பு பழக்கத்தை நாங்கள் எல்லோரும் தான் மறந்து குறைத்து வருகின்ற இந்த காலத்தில் காலமறிந்து காரியமாற்றிய உங்களை அள்ளி அகத்தோடு அணைக்கின்றேன்.
எல்லாமே புதுமையான முயற்சிகள் மிக அருமையாக இருந்தது முதல் இரண்டு நாட்களிலும் சுகவீனம் காரணமாக என்னால் திருவிழாவில் பங்கு கொள்ள முடியவில்லை இருந்தாலும் எனது பிள்ளைகளை அனுப்பியிருந்தேன் எனது மகள் நப்லா நிறைய புத்தகங்களை வாங்கி வந்தாள் சின்ன மகள்கள்(இரட்டைப் பிறவிகள்) இருவரும் அவர்களுக்கான புத்தகங்களை வாங்கி வந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்வில் தோழர் நந்தினி சேவியர் எழுதிய "பிடித்த சிறுகதை" பற்றி ஏ. பீர்முகமது ஆற்றிய உரையை வீட்டிலிருந்து கேட்டேன், அந்தப் புத்தகம் என்னால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது மகள் வாங்கி வருவாள் என்று நினைத்தேன் வாங்கவில்லை.
 மூன்றாம் நாள் நான் விழாவில் பங்கு கொள்ள வந்த போது மகளும் வந்தாள் எனக்கு பிடித்த நந்தினி சேவியரின் "பிடித்த சிறுகதை" நூலை வாங்கித் தந்தாள் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன் அந்தப் புத்தகத்தில் 446ஆம் பக்கம் என்னைப் பற்றியும் என் இலக்கிய முயற்சிகள் பற்றியும் மிகவும் இறுக்கமாக எழுதியிருந்தார் நமது நந்தினி.
நான் எழுதிய கதைகளுள் நந்தினி சேவியருக்கு பிடித்த கதையாக வேறு ஒரு கதையை நான் கற்பனை பண்ணி இருந்தேன் ஆனால் அவர் வேறொரு கதையை தனக்கு பிடித்த கதையாக சொல்லியிருந்தார் நனவோடை யுக்தியில் நான் 1983.03.14ஆம் திகதி தினகரனில் எழுதிய கதையது. நமது நந்தினி சேவியர் அப்படித்தான் அவர் வித்தியாசமானவர் வேறுபாடானவர் என்னுடைய நெருக்கமான தோழர். நானும் அவரும் மிக நெருக்கமாக இருந்தோம் தோழமையுடன்.
"பிடித்த சிறுகதை" நூலில் பின்வரும் தென்கிழக்கு எழுத்தாளர்களின் கதைகள் நந்தினிக்கு பிடித்திருந்தது
அ.ஸ.அப்துஸ்ஸமது, மருதூர் கொத்தன்,நீலாவணன்,ஏ.இக்பால், சண்முகம் சிவலிங்கம்,எம்.ஏ.நுஹ்மான், உமா வரதராஜன்,யூ.எல்.ஆதம்பாவா, மருதூர்க்கனி,மு. சடாட்சரன்,எஸ். முத்துமீரான்,எம்.ஐ.எம்.ரஊப், திருக்கோவில் கவியுவன், அன்புடீன், யுவன், அம்ரிதா ஏயெம், நட்பிட்டிமுனை பளீல்,மு.இ.அ ஜபார், மருதூர் பாரி,ஜின்னாஹ்,எம்.ஐ.எம். முஸம்மில்
ஸிராஜ் மஷ்ஹுர் நீங்கள் தொடர்ந்து நல்ல இலக்கியவாதியாகவும், இரசிகனாகவும் இலக்கியத்தை இயக்குபவனாகவும், இணக்குபவனாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
மருதூர் கனி நல்லதொரு சிறுகதை எழுத்தாளர் கவிஞர் சமூகவாதி முற்போக்காளர் அவரை இந்த இடத்தில் நினைவுகூர்ந்து உங்களோடு ஒப்பனை செய்து பார்க்கிறேன்.
உங்களுக்கு எனது வாழ்த்தும் கைகொடுப்பும் என்றும் இருக்கும் நன்றி....

தம்பி சிறாஜ் உன் திறமையை என்னவென்று பாராட்டுவேன்.... எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் தம்பி சிறாஜ்  உன் திறமையை என்னவென்று பாராட்டுவேன்....  எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் Reviewed by Editor on February 27, 2020 Rating: 5