தீவிரவாத வன்முறைக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டேன்- ஜனாதிபதி தெரிவிப்பு


தீவிரவாத வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காதிருப்போம் என்பதுவே இன்றைய நாளில் நாம் பூணும் திடசங்கற்பம் என்று அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும் முன்னணி தங்கு விடுதிகள் சிலவற்றையும் இலக்குவைத்து மேற்கொள்ஏப்பட்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று (21) ஒரு வருடம் நிறைவடைகின்றது.

இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மூலம் உயிரிழந்தவர்களினதும் கடுமையாக காயப்பட்டவர்களினதும் குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெரிதும் கவலைக்குள்ளான கத்தோலிக்க மக்களுக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

ஜனாதிபதி தனது அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்-

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலினால் சுமார் 270பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் அங்கவீனமுற்றுள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும். எந்த சிந்தனையின் பெயரில் இந்த மனிதப் படுகொலை இடம்பெற்றாலும் இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும்.

தேசிய பாதுகாப்பை மறந்து பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலைக்கு வசதியான பின்னணி உருவானது. அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல.

'சுபீட்சத்தின் நோக்கு' என்ற கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு நான் எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வகைகூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிப்புக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு நான் மீண்டும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(ஜனாதிபதி முகநூல் பக்கத்திலிருந்து)
தீவிரவாத வன்முறைக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டேன்- ஜனாதிபதி தெரிவிப்பு தீவிரவாத வன்முறைக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டேன்- ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by Editor on April 21, 2020 Rating: 5