சுற்றுலாத்துறை அதிகாரிகள் பொத்துவிலுக்கு விஜயம்




(எஸ்.எம்.அறூஸ், எம்.ஐ.எம்.சிஹான்,  ஹம்தான் இஸ்ஸதீன்)

கொரோனா வைரஸ் தொற்று அச்ச சூழ்நிலையினால் நாடு திரும்பாமல் ஹோட்டல்களில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகளின் நலன்களையும்,பாதுகாப்பையும் நேரில் பார்வையிடுவதற்காக சுற்றுலாத்துறை அதிகாரிகள் குழு நாட்டின் சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பொத்துவில் அருகம்பே பிரதேசத்திற்கும் இக்குழுவினர் நேற்று முன்தினம் விஜயம் செய்தனர். இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் வழிகாட்டலிலும், ஆலோசனையிலும் விஜயம் செய்த இக்குழுவில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை, தேசிய சுற்றுலா தொழிற்துறையினருக்கான சங்கம் மற்றும் சுற்றுலாத்துறை பொலிஸ் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவினர் சுற்றுலா பயணிகளின் நிலமைகள் தொடர்பிலும், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா தொழிற்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் பார்த்தீபன், பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த திஸாநாயக்க, இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜகுபர், அறுகம்பே சுற்றுலா ஒன்றியத்தின் தலைவர் எம்.எச்.அப்துல் றஹீம், அறுகம்பே சுற்றுலாத்துறை பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.ஆர்.திஸாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்குழுவினர் ஹோட்டல்களில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர். அத்தோடு சுற்றுலாப்பயணிகளுக்கு சிறிய அன்பளிப்புக்களையும் வழங்கி வைத்தனர்.
சுற்றுலாத்துறை அதிகாரிகள் பொத்துவிலுக்கு விஜயம் சுற்றுலாத்துறை அதிகாரிகள் பொத்துவிலுக்கு விஜயம் Reviewed by Editor on April 27, 2020 Rating: 5