மட்டக்களப்பில் முஸ்லிம் முதல்வர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!


(ஜெமீல் கல்குடா)

மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ் முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரியும் கல்லூரிக்கு அட்டாளைச்சேனை முஸ்லிம் முதல்வரை இடமாற்றியமை தொடர்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (06) தாழங்குடா கல்விக் கல்லூரி முன்னால் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியினை பாதுகாக்கும் அமைப்பு என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் கல்லூரிக்கு முன்பாக நடைபெற்றது.
தமிழர்கள் அதிகமாக வாழும் இப்பகுதிகளில் உள்ள தமிழர்களின் கலாசாரத்தினையும் பாரம்பரியத்தினையும் கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரியில் முதல்வராக தமிழரே நியமிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

1992ஆம் ஆண்டு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று முஸ்லிம் இனத்தவர் ஒருவருக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் அல்ல என்றும்,தெரிவித்த அவர்கள், எமது கலாசாரத்தினை பாதுகாக்கவே முற்படுகின்றோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்காதே போன்ற சுலோசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரிடம் மகஜர் ஒன்றும் போராட்டகாரர்களால் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கையெடுப்பதாக அமைப்பாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
மட்டக்களப்பில் முஸ்லிம் முதல்வர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்! மட்டக்களப்பில் முஸ்லிம் முதல்வர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்! Reviewed by Editor on June 07, 2020 Rating: 5