தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முயற்சிப்பதாக கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் பிரதிநிதி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். இன்று (13) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க இன்றைய தினம் நாங்கள் வடக்கிற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளோம். நானும் போலீஸ் பேச்சாளரும் வடக்கிற்கு விஜயத்தினை மேற்கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் திணைக்களத்துடனும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறோம்.
அதேபோல் வவுனியாவுக்கும் செல்லவுள்ளோம் . இன்று வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டங்களை நடத்தவுள்ளோம். அதில் பல்வேறு விடயங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் .
எமக்கு தற்போது உள்ள ஒரு பிரச்சனை கொவிட் 19 வைரஸ் பிரச்சினை ஆகும். இது உலகளாவிய ரீதியில் உள்ள ஒரு பிரச்சனை. உலக சுகாதார ஸ்தாபனம் எப்போது கொவித் 19 இல்லை என அறிவிக்கின்றதோ அன்றுவரை எமக்கு இந்த கொரானா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் காணப்படும்.
எனவே அந்த நிலையிலும் எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் நாம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உள்ளோம். அதாவது தனிமைப்படுத்தல் சட்டம் சுகாதார நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பின்பற்றி எதிர்வரும் தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றோம்.
அதேபோல் தேர்தல் திணைக்களமும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே அனைவரின் ஒத்துழைப்போடும் குறிப்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் மிகவும் முக்கியமானது. அதாவது அனைவரும் மாஸ்க் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அதேபோல் சுகாதாரத் திணைக்களத்தின் சுகாதார நடைமுறைகளை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது எமது கோரிக்கையாக இருக்கிறது . அதேபோல் தேர்தல் வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அது சட்டத்துக்குரிய குற்றம் ஆகும். எனவே அது எவராக இருந்தாலும் தேர்தல் வன்முறையுடன் சம்பந்தப்பட்டு எமக்கு முறைப்பாடு வழங்கப்படும் இடத்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
(News.lk)
தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முயற்சி..
Reviewed by Editor
on
July 13, 2020
Rating:
Reviewed by Editor
on
July 13, 2020
Rating:
