முகக்கவசம் அணியாதவர்கள் மீது விசேட நடவடிக்கை


கொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முகக்கவசம் அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் விஷேட கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சீருடைக்கு மேலதிகமாக சிவில் உடையிலும் புலனாய்வு அதிகாரிகளும் இந்த விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் அசமந்த நிலை காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்தே இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முககவசங்களை அணிந்த நிலையில் குற்றச் செயல்கள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலும் பொலிஸார் மேற்படி விஷேட பொலிஸ் குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்படி குழு மேற்கொண்டுள்ளன.

இவ்வாறு முககவசங்கள் அணியாத சட்டத்தை மதிக்காத சுமார் 2731 நபர்கள் தமது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் சுயதனிமைப்படுத்தலில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முககவசம் இல்லாத நபர்களுக்கு பொலிஸாரின் உதவியுடன் சுமார் ஒரு இலட்சம் முககவசங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்திலுள்ள சிறிய பாடசாலைகளுக்கு தேவையான முககவசங்கள் சமூக பொலிஸ் பிரிவின் உதவியுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
முகக்கவசம் அணியாதவர்கள் மீது விசேட நடவடிக்கை முகக்கவசம் அணியாதவர்கள் மீது விசேட நடவடிக்கை Reviewed by Editor on July 04, 2020 Rating: 5