மின்சார பட்டியல் பிரச்சினைக்கு குழு நியமனம்



கொரோனா காலப்பகுதியில் அதிகமாக வந்த மின்சார பட்டியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு கலந்துரையாடி நிவாரணம் வழங்குவதற்கான யோசனையை முன்வைப்பதற்காக 04 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு வழங்கப்பட்ட மின்சார பட்டியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பாக ஆராயும் குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம், ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன், இக்குழுவுக்கு தலைமை தாங்குகின்றார் என்பதோடு, இக்குழுவில், இலங்கை  மின்சார சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூவர் அடங்குகின்றனர்.

விடயம் தொடர்பில் ஆராய்ந்து  எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவுக்கு அமைச்சின் செயலாளர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மின்சார பட்டியல் பிரச்சினைக்கு குழு நியமனம் மின்சார பட்டியல் பிரச்சினைக்கு குழு நியமனம் Reviewed by Editor on July 02, 2020 Rating: 5