
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நிவர் புயல் காரணமாக கரை ஒதுங்கிய தங்க மணிகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கன மழை கடந்த சில தினங்களாக பெய்தது.
இந்த கன மழை காரணமாக, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன.
அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நிவர் ஆந்திரா மக்கள் சிலருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடலோரப் பகுதியிலுள்ள சிறிய கிராமமான உப்படாவில் கடந்த வெள்ளிக்கிழமை காலை கடற்கரை பகுதியில் தங்கம் போல ஏதோ மின்னுவதை மீனவர் ஒருவர் பார்த்துள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக ஊர் மக்களிடம் கூற, அனைவரும் கடற்கரைக்கு வேகமாக ஓடி வந்துள்ளனர். அப்போது அங்கு சிறிய சிறிய உருண்டைகள் போன்ற மணிகளாக தங்கம் கிடைக்க, அங்கு ஏராளமான மக்கள் கூடியுள்ளனர்.
கடற்கரையில் திரண்ட மக்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தலா 3000 ரூபாய்க்கு மதிப்பிலான தங்கத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், அடுத்தடுத்து வரும் அலைகளில் மேலும் தங்கம் கிடைக்கும் என்று ஆர்வத்துடன் பல மணி நேரம் ஊர் மக்கள் அங்கேயே காத்துக் கிடந்துள்ளனர்.
இது குறித்து உள்ளூர் பொலிசார் கூறுகையில், உப்படா கிராமத்தில் இருக்கும் கோவில்கள், ஏராளமான வீடுகள் கடல் நீரால் அரிக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் 150 ஏக்கர் நிலம் கடல் நீரால் மாயமாகி இருக்கிறது.
இந்தப் பகுதியில் வீடுகள் மற்றும் கோவில்கள் கட்டும் போதும் சிறிய அளவிலான தங்கத்தை அடித்தளத்தில் போட்டு பணிகளைத் தொடங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதுதான் கடல் அரிப்பால் தற்போது வெளியே வந்திருக்கக் கூடும். கடற்கரைக்குச் சென்ற அனைவருக்கும் தங்கம் கிடைக்கவில்லை. சிலருக்கு மட்டுமே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக கூறியுள்ளனர்
Reviewed by Editor
on
November 29, 2020
Rating: