(றிஸ்வான் சாலிஹூ)
பாராளுமன்றத்தின் சகல உறுப்பினர்களின் சிறப்புரிமை, சட்டமாக்கும் தொடர்புடையவற்றின் நம்பிக்கை என்பவற்றின் மத்தியில் எம் அனைவரையும் ஏமாற்றி விட்ட இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்கள் எனும் சந்தேகம் எனக்கு எழுகின்றது. அது பாராளுமன்றத்தில் ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை எனவே அந்த வர்த்தமானியை ரத்து செய்ய வேண்டும் என தேசிய காங்கிரசின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
நேற்று (06) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்,
கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்த உடல்களிலிருந்து வைரஸ் பரவுமா அல்லது வைரஸ் நிலத்தடி நீரில் கலக்குமா எனும் பிரச்சினை இருக்கிறது. இவ்விடயம் தொடர்பில் அரசியலின்றி குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வோம் என்று ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் போன்றோர் கூறினார். இப்போது கொரோனா தொற்றுள்ள மரணித்த உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்பதற்கான வழிகாட்டலை நிபுணர்கள் குழு வழங்கியுள்ளனர்.
அதனை முன்னாள் ஜனாதிபதிகள், தற்போதைய ஜனாதிபதி,சிரேஷ்ட அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக சகோதர சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். எமது கொரோனா சட்டம் 222 இல் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது எமது சட்டங்களில் ஒன்று. அந்த சட்டங்கள் அவ்வாறு இருக்கும் போது பாராளுமன்றம் செயற்பாட்டில் இல்லாத காலத்தில் சட்டத்தை பாராளுமன்ற சபைக்கு சமர்பிக்காமல் வர்த்தமானி ஒன்றின் மூலம் அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள் என்றால் அது இந்த பாராளுமன்றத்தின் சகல உறுப்பினர்களின் சிறப்புரிமை, சட்டமாக்கும் தொடர்புடையவற்றின் நம்பிக்கை என்பவற்றின் மத்தியில் எம்மனைவரையும் ஏமாற்றி விட்டா இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்கள் எனும் சந்தேகம் எனக்கு எழுகின்றது அது பாராளுமன்றத்தில் ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை.
எனவே அந்த வர்த்தமானியை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அது சட்டத்திற்கு முரணாக உள்ளது. அவ்வாறு ரத்து செய்யாவிட்டால் தனிநபர் பிரேரணையாக கோவிட் 19 என்ற பிரேரணையை நான் பாராளுமன்றில் சமர்ப்பிப்பேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாஹ் நாடாளுமன்றத்தில் பேசினார்.
