ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவத்தைப் பின்தள்ளி, பாணிக்குப் பின்னால் ஓடுவதன் மூலம், நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, ஒரு சொட்டு விசத்தைக் கலந்துகொண்டுவந்து கொடுத்திருந்தால், என்ன நடந்திருக்கும் என வினவினார்.
'ஒரு கோப்பை பாணியைப் பருகிய, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவுக்கு, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. சுகாதார அமைச்சர் பாணியைப் பகிரங்கமாக அருந்திக் காட்டுகிறார். இதைப் பரிசோதித்து அறிக்கை ஒன்றைப் பெற வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை புதன்கிழமை (20) சமர்ப்பித்து உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், 'எந்தவொரு பயமுமின்றிப் பாணியைப் பருகுகின்றனர். இதென்ன பைத்தியக்காரத்தனமான வேலை இதனால் ஆயுர்வேத மருத்துவமே துச்சமாகப் பார்க்கப்படுகின்றது' என்றார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள், இந்தத் தொற்றைக் குணப்படுத்துவதற்கு கோரிக்கை விடுத்திருந்தாலும் அரசாங்கத்திடமிருந்து அதற்கான அனுசரணை கிடைக்கவில்லை. எனினும், ஆளும் தரப்பினர் இந்தப் பாணியின் பின்னால் ஒடுகின்றனர்; அமைச்சரின் பின்னால் ஒடுகின்றனர் எனவும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
January 22, 2021
Rating:
