"சர்வதேச நாடுகளிடம் தீர்வைப் பெற முயற்சித்தால் மேலும் பிரிவினையே உருவாகும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள விடயமானது இது பழைய லேகியம், மிஸ்டர் அலி சப்ரி என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச முயற்சி மட்டும் தீர்வை தராது. உள்நாட்டிலும் போராட வேண்டும். ஆனால், முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே இருங்கள். உலகத்தை நாடாதீர்கள். நமது பிரச்சினையை நாமே பேசி தீர்ப்போம் என தமிழ் மக்களுக்கு ஆலோசனை சொல்ல வராதீர்கள்.
இது கடந்த 50 வருடங்களாக விற்கப்படும் பழைய லேகிய மருந்து. உள்நாட்டில் பலமுறை பேசி, ஒப்பந்தம் எழுதி, பக்கத்து நாடான இந்தியாவுடனும் ஒப்பந்தம் செய்து, அதுகூட முழுமையாக நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்டதால்தான் தமிழர்கள் சர்வதேச நாடுகளிடமும் பேசுகிறார்கள்.
இது மாதிரிதான், உங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 1990ல், தென் மாகாண சிங்கள இளைஞர்களுக்காக, உலக நாடுகளிடம் சென்று பேசினார். ஐ.நாவிடம் பேசினார்.
இதெல்லாம் கேட்டு, படித்து அறியுங்கள். தெரியாவிட்டால், "அறிவுக்கண்களை" மூடிக்கொண்டு சும்மா இருக்க பழகுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
February 27, 2021
Rating:
