(றிஸ்வான் சாலிஹூ)
பொதுச்சேவை ஆணைக்குழுவின் வருடார்ந்த இடமாற்ற கட்டளைக்கிணங்க இடமாற்றம் செய்யப்பட்டு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை, சட்டமும் ஒழுங்கும், நிதி, போக்குவரத்து, சுற்றுலாத்துறை, கட்டடங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சில் பிரதம கணக்காளராக நியமிக்கப்பட்ட எம்.ஐ.எம். முஸ்தபா இன்று (22) திங்கட்கிழமை தனது கடமைகளை அமைச்சில் பொறுப்பெற்றுக் கொண்டார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இவர், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் வியாபார நிர்வாக துறையில் பட்டம் பெற்று இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் பொது நிதி மற்றும் முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
1992ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்து கொண்ட இவர், மூதூர் மற்றும் மொனராகலை பிரதேச செயலகம், தேசத்தினை கட்டியெழுப்பும் அமைச்சின் அம்பாறை மாவட்டத்தின் கணக்காளராகவும், அக்கரைப்பற்று பிரதேச செயலகம், அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளராகவும் மற்றும் இறுதியாக அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளராகவும் சேவையாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண திறைசேரியின் கொடுப்பனவு மற்றும் பெறுகையின் பிரதம கணக்காளர் எம். கலைஜானசுந்தரம், பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
March 22, 2021
Rating:
