
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச சபை வழங்கியுள்ள 10 ஏக்கர் காணியில் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான ஒழுங்குகளை மேற் கொள்வதற்காக காத்தான்குடி, கல்குடா மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகளை உள்ளடக்கிய சிவில் சமூக அமைப்புக்களைக் கொண்ட குழுவொன்று இதில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராயும் முக்கிய கூட்டமொன்று ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (04) வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஜனாப். நெளபர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி, கல்குடா, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள் உட்பட உலமாக்கள் ஒட்டமாவடி பிரதேச செயலக மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை அதிகாரிகள் சுகாதார அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளை அவசரமாக மேற் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அரசுக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 10 கொவிட் ஜனாக்கள் குளிரூட்டிகளிலும் பிரேத அறைகளிலும் உள்ளன.
இதன் மூலம் இந்த ஜனாசாக்களை இன்னும் ஒரு சில தினங்களில் நல்லடக்கம் செய்ய துரிதமான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
March 04, 2021
Rating: