கொவிட் தொற்று காரணமாக இலங்கை அதிபர் சேவை தரம் 3 க்கு ஆட்சேர்க்கும் முறையில் தற்காலிகமாக மாற்றங்களை செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதன்படி போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை நடத்துவதற்குப் பதிலாக கட்டமைக்கப்பட்டது நேர்முகப் பரீட்சையை மாத்திரம் நடத்தி தகைமை உடையவர்கள் தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், அதிபர் சேவையில் நீண்ட காலமாக தற்காலிக அதிபர்களாக பணியாற்றும், ஆசிரியர் சேவையிலுள்ளவர்கள் மற்றும் சேவை யாப்பின்படி தகைமை பெற்ற ஆசிரியர் சேவையில் உள்ள ஏனையவர்களுக்கும் இந்த சந்தர்ப்பம் கிடைக்கும்.
இதுவரையிலும் இலங்கை அதிபர் சேவை தரம் 1 - 2 மற்றும் 3 க்கு சுமார் 4600 வெற்றிடங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக அமைச்சரவையில் நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
தற்போது இலங்கை அதிபர் சேவை I, IIமற்றும் III தங்களில் 4,600 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையால் போட்டிப்பரீட்சை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி முறையாக பதவி நியமனங்களை வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் எடுக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது நீணடகாலமாக அதிபர் பதவியில் பதில் கடமைகளை மேற்கொள்ளும் ஆசிரியர் சேவையில் தகைமை பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை யாப்பிற்கமைய தகைமைகளைப் பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சேவையிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கி இச்சந்தர்ப்பத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காவும், இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கான நியமனங்களை வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
March 02, 2021
Rating:
