
(றிஸ்வான் சாலிஹூ)
நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் பிரகாரம், நாம் காலாகாலம் கடைப்பிடிக்கும் கஞ்சி வழங்கும் செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த நேரிட்டுள்ளது என்று அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நோன்பு காலத்தில், பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய பல விதிமுறைகளும் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதைப் பின்பற்ற வேண்டிய கடமைப்பாடுகள் எமக்கும் உள்ளன.
நாட்டின் சட்டதிட்டங்களை நாம்,பூரணமாக கடைப்பிடிப்பவர்கள். அதிலும் பள்ளிவாசல்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை எமது நம்பிக்கையாளர்கள் பேணிவருவதையும் நாம் அறிவோம்.
எனவே, கடந்த காலங்களில் ஒன்றாக இணைந்து நாம் செயற்பட்டது போன்று, இம்முறையும் ஒழுங்கு முறையாக சட்டதிட்டங்களை மதித்து, எமது மார்க்க கடமைகளில் ஈடுபடுவதென அனைத்துபள்ளிவாசல்கள் சம்மேளனம் தீர்மானித்துள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.
இந்நிலைமை சீராகி இயல்பு வாழ்வு திரும்பிட இறைவனைப் பிரார்த்திப்போம் என்று அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம் சபீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
