அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தென்கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய டவுக்டே ‘TAUKTAE’ என்ற சூறாவளியானது ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து 2021 மே 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வட அகலாங்கு 15.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 72.7E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மே 18ஆம் திகதி குஜராத் கரையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இத் தொகுதியினால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
