கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைத்தியசாலை கட்டமைப்புகள் அதன் திறனை கடந்துள்ளமையினால் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகள் மற்றும் கட்டில்களை அதிகரிப்பதனால் மாத்திரம் நெருக்கடிக்கு தீர்வு கிடைத்து விடாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார திறன் என்பது கட்டில்கள் மாத்திரம் அல்ல என்பதனை தெளிவுபடுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு கோவிட் தொற்றாளர்களுக்காக ஒரு லட்சம் கட்டில்கள் இருந்தாலும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் போதுமான அளவு இல்லை என்றால் அதில் பயனில்லை. தற்போது வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றனர்.
உறக்கமின்றி பணியாற்றுகின்றார்கள். அவர்கள் சோர்வடைந்துள்ளனர். பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை நீடிக்குமானால் கோவிட் தொற்றால் இந்தியா முகங்கொடுத்துள்ள பாரிய நெருக்கடி நிலை இலங்கைக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Sifnas Hamy
on
May 17, 2021
Rating:
