இவ்ஆண்டுக்குள் 50 இலட்சம் டோஸ் பைசர் தடுப்பூசிகளை இலங்கை இறக்குமதி செய்யும் என்று உற்பத்தி விநியோகம் மற்றும் மருந்துகள் ஒழுங்கு முறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (02) புதன்கிழமை நடத்திய விசேட ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை 3 தொடக்கம் 4 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை முதல் கட்டமாக இறக்குமதி செய்யவுள்ளது. அடுத்த மாதத்துக்குள் இவை அனுப்பி வைக்கப்படும் என்று பைசர் - பயோ என்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு கடந்த மே 7ஆம் திகதி நாட்டில் கொவிட் -19 தடுப்பூசியான பைசரை அவசரத் தேவை அடிப்படையில்பயன்படுத்த ஒப்புதல் அளித்தது.
இந்த ஆண்டுக்குள் 50 இலட்சம் பைசர் டோஸ்கள் இறக்குமதி செய்யப்படும். இதேசமயம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிப் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு இலங்கை பல தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்
