கொவிட் உயிரிழப்புகள் குறித்து உரிய தருணத்தில் புள்ளிவிபரங்களை வெளியிடாத அதிகாரிகளிற்கு எதிராக சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்ச்சியற்ற விதத்தில் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் வைத்தியர்சந்திக எபிடக்காடுவ தெரிவித்துள்ளார்.
101 பேரின் உயிரிழப்பு குறித்து ஒரேநாளில் விபரங்கள் வெளியானமை மக்கள் மத்தியில் மன அமைதியின்மையை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஒரே நாளில் இந்த மரணங்கள் நிகழவில்லை என்பது புலனாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பலநாள் உயிரிழப்புகளே ஒரே நாளில் வெளியாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிடும் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக உள்ள தொற்றுநோய் பிரிவினருக்கும் ஏனையவர்களிற்கும் எதிராக தொடர்ச்சியற்ற தவறான புள்ளிவிபரங்களை வெளியிட்டமைக்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வாறான புள்ளிவிபரங்களை உடனடியாக வெளியிடவேண்டியது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
Reviewed by Editor
on
June 13, 2021
Rating:
