அனைத்து மதங்களுமே நன்நெறிகளை மனித இனத்துக்கு தந்துள்ளன - ஜனாதிபதி

ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும் என்று ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

இஸ்லாமிய சமூகம், தமது கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாகவும் இதனை நான் பார்க்கிறேன்.

அனைத்து மதங்களின் தலைவர்களும் மனித சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான உலகப் பொதுவான நன்நெறிகளை எமக்குத் தந்துள்ளனர்.

சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், அவற்றின் பங்களிப்பு மகத்தானதாகும்.

இது, உலகின் தொடர்ச்சியான நல் இருப்புக்கு இன்றியமையாத காரணியாகும்.

இஸ்லாத்தின் இறுதித் தூதராகக் கருதப்படும் முஹம்மத் நபியவர்களின் வாழ்வியலைப் பின்பற்றும் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்பார்க்கும் ஈருலக வெற்றியையும் இறை நெருக்கத்தையும் அடைய, இந்த ஹஜ் பண்டிகைக் காலம் உதவும்.

கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக, முன்னரைப் போலவே பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் செயற்படுவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது, அனைவரதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்காகக் கொண்டதாகும்.

இந்த விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, இந்தப் பண்டிகைக் காலத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுமாறு நினைவூட்ட விரும்புகிறேன்.

புனித அல் குர்ஆனையும் முஹம்மத் நபியவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தையும் பின்பற்றும் இஸ்லாமியர்களான உங்கள் அனைவருக்கும், இந்த ஹஜ் பெருநாள், இறை நெருக்கத்தையும் ஆன்மீக உயர்ச்சியையும் பெற்றுத்தரும் உன்னதத் திருநாளாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று ஜனாதிபதி தனது பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.




அனைத்து மதங்களுமே நன்நெறிகளை மனித இனத்துக்கு தந்துள்ளன - ஜனாதிபதி அனைத்து மதங்களுமே நன்நெறிகளை மனித இனத்துக்கு தந்துள்ளன - ஜனாதிபதி Reviewed by Editor on July 21, 2021 Rating: 5