(றிஸ்வான் சாலிஹு)
கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனையின் நிருவாகத்தின் கீழும், தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் (NSACP) வழிகாட்டலின் கீழும் இயங்கிவரும், பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நோய்களுக்கான பிரிவு, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்த நிலையில், இன்று (20) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய மேகநோயியல் வைத்திய நிபுணர் (Consultant Venereologist) டாக்டர். கே.ஏ.சீ.ஆர். விஜேசேகர மற்றும் கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் பிரிவின் மருத்துவ அதிகாரி (MO/STD) டாக்டர். எம்.என்.எம்.தில்ஷான் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணண் அவர்களும், விசேட அதிதியாக கிழக்கு மாகாண சமுக வைத்திய நிபுணர் (Consultant Community Physician) டாக்டர். எஸ்.அருள்குமரன் அவர்களும், கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் பிரிவின் ஊழியர்களும், தன்னார்வத் தொண்டர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.