(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதித்தலைவர் உ.மு.தில்ஷான் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கான தடுப்பூசிகள் இளைஞர் விவகார விளையாட்டுதுறை அமைச்சின் கீழ் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி மற்றும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையின் கீழ் எமது பிரதேசத்திலும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதற்கான தரவுகள் அக்கரைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமீலுல் இலாஹியினால் அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினூடாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இச்செயற்திட்டம் அக்கரைப்பற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எல்.பி. முஹைமீன் மற்றும் பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் எம்.எம்.ருக்சான் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளது என்றும் பிரதித்தலைவர் தில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.