தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் மாவட்ட, பிரதேச சம்மேளனங்களில் உள்ள பிரதிநிதிகளுக்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (04) சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலியின் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த காலங்களில் கொரோணா தொற்றில் பாதிக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த குடும்பங்களில் வசிக்கும் மாவட்ட, பிரதேச சம்மேளனங்களில் அங்கத்துவம் வகிக்கும் இளைஞர்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டப்ளியூ.ஏ.ஜீ.எஸ். தமயந்தி, கல்முனை வடக்கு உப பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி டீ. மோகன்ராஜ், நிஸ்கோ பணிப்பாளர் சபை முன்னாள் பணிப்பாளர் யூ. எல்.என். ஹுதா உமர், தேசிய சம்மேளன பிரதிநிதி சிப்னாஸ் அஸீஸ் உட்பட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.