தற்பொழுது உள்ள தொற்றுநோய் நிலைமையின் காரணமாக நாடு முடக்கப்பட்டு இருக்கும் வேளையில் தமது உயிர்கள் மீது உள்ள ஆபத்தையும் கண்டுகொள்ளாமல் அவசரத்தேவை மற்றும் பராமரிப்பு சேவையில் ஈடுபடும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களுக்கு நாட்டு மக்கள் அனைவரினதும் நன்றிகளும் கௌரவமும் கிடைக்க வேண்டுமென நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவசரத் தேவைகள் காரணமாக ஏற்படும் நீர் விநியோக தடங்களின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் 24 மணி நேரமும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களை அவர்கள் பணிகளில் ஈடுபடும் போது சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தும் சந்தர்ப்பத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இன்று (12) கொழும்பு, ஒருகொடவத்தை, அமதலை, மாளபே மிஹிந்துபுர மற்றும் வெள்ளவத்தை பீட்டர்ஸ் வீதி ஆகிய பகுதிகளில் அவசர பராமரிப்பு பணிகள் இடம்பெற்றதுடன் இந்த ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ஊழியர்களை சந்திப்பதற்கு அமைச்சர் அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்;
எமது பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இவ்வாறு மேற்கொள்ளும் அற்பணிப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன் மிகவும் கடினத்துடன் இந்த நீர்க் குழாய்களை சீர் செய்யும் பணிகளையும் அவசரமாக மேற்கொண்டு இயல்பு நிலைக்கு கொண்டு வருவதை நாம் விசேடமாக பாராட்டுகிறோம். இந்தப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, முயற்சி மற்றும் அறிவு என்பன ஏனைய ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Reviewed by Editor
on
September 13, 2021
Rating:
