ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான பிரயத்தனங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்கள்.
மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உயர்தொழில் சார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமாகிய நாங்கள், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்படும் நோக்கில், மிகவும் சிரத்தையாக கவனத்திலெடுக்கப்படவேண்டுமென திடமாக நம்புகின்றோம்.
இதற்கான தீர்வைக் காண்பதில் ஏற்படும் காலதாமதம் ஏற்கனவே உடைவுக்குள்ளாகியுள்ள மாணவர்களின் கல்வியில் மேலும் பின்னடைவைக் கொண்டுவருவதோடு, கோவிட் -19 தொற்று தீவிரமடைவதற்கும் வழிகோலும்,இதனைத் தீர்ப்பதற்கு தேசிய சம்பள மற்றும் ஆளணி ஆணைக்குழுவி ஊடாக ஆழமாக ஆராயப்பட்டு, இப்பிரச்சினைக்கு "நின்று நீடிக்கக்கூடிய, ஏனைய துறைகளைப் பாதிக்காத முறையில் தீர்வொன்று காணப்படவேண்டும்.
ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் ஆராயப்பட்டு தொழில் நுட்ப அறிக்கையொன்று பெறப்பட்டு அதன் மூலமாக நின்று நீடிக்கக்கூடிய ஏனைய துறைகளிற்கு சங்கிலித்தொடர் போல அமையக்கூடிய விதமாக ஏற்படாமல் தீர்வொன்று காணப்படவேண்டும்.
மேலும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் இதய சுத்தியுடன் உள்ளது என்பதனை வெளிப்படுத்துமுகமாக, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று காணப்படும் வரைக்கும் ஓர் "இடைக்காலக் கொடுப்பனவொன்று" ஆசிரியர்களிற்கும் , அதிபர்களிற்கும் வழங்கப்படவேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.