சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற விமான சுற்றுலா

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் மட்டக்களப்பு நகரில் விசேட விமான சுற்றுலா ஒன்றை இன்று (04) திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எ.எம்.ஜௌபர் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்திருந்ததோடு, சுற்றுலாத் துறையினை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா விமான சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருனாகரன் பிரதம அதிதியாக கலந்தது கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

தற்போதைய கொவிட் சூழ்நிலையில் முடங்கிய நிலையில் இருக்கும் மக்களை சுற்றுலாத்துயின் ஊடாக மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கு மற்றும் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கின் அடிப்படையிலேயே இந்த "ஜாய் டிரைவ்” விமான சுற்றுலா மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அதிகளவிலான உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் விசேட விமான சுற்றுலாவில் பயணித்ததுடன், மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தனர். 

இன்றைய விமான சுற்றுலாவானது மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து ஆரம்பித்து ஏறாவூர் வழியாக பாசிக்குடா வரை சென்று காத்தான்குடி வரை பயணித்து விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், வாராந்தம் இச் சுற்றுலா பயணத்தினை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஹரிப்பிரதாப், வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எஸ்.தாசன், மட்டக்களப்பு சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் என்.எ.நிறோசான் மற்றும் 231 ஆவது படைப்பிரிவின் கேணல் டிலூப பண்டார உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.






சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற விமான சுற்றுலா  சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற விமான சுற்றுலா Reviewed by Admin Ceylon East on October 04, 2021 Rating: 5