மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று (19) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டடுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷணபிள்ளை நேசராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
குறித்த நபரும், அவருடைய நண்பனும் சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை (18) இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மதுபானத்துடன் சென்று மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும், யானை பயத்தினால் அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
(கனகராசா சரவணன் - தினக்குரல்)